
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணத்தில் நவீன வெடி குண்டு தாக்குதலில், சுரங்கத் தொழிலாளிகள் 10 பேர் பலியாகியுள்ளனர்.
பலோசிஸ்தான் மாகாணத்தின் ஹர்ணாய் மாவட்டத்திலுள்ள சந்தையை நோக்கி தங்களது வாகனத்தில் இன்று (பிப்.14) சுரங்கத் தொழிலாளிகள் குழுவாக பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஐ.ஈ.டி. எனும் நவீன வெடி குண்டு வெடித்ததில் 10 தொழிலாளிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அப்பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தி வரும் பலோச் லிபெரேஷன் ஆர்மி எனும் அமைப்பு இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது தாக்குதல் நடைபெற்ற ஹர்ணாய் மாவட்டம் பலோசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவேட்டாவிலிருந்து 160 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் பிரிவிணைவாத அமைப்புகளை அழிக்க அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இதையும் படிக்க: எலான் மஸ்க் அமெரிக்க அரசுத் தகவல்களை கையாள்வதை எதிர்த்து வழக்கு!
இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களின் ஆட்சி அமைந்ததிலிருந்து பாகிஸ்தான் நாட்டின் எல்லையோர மாகாணங்களில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
முன்னதாக, இம்மாதத்தின் துவக்கத்தில் பலோசிஸ்தான் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் சென்ற சாலைகளை மறித்து அவர்களது வாகனத்தின் மீது சுமார் 60 முதல் 70 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அதேபோல் கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் ராணுவத்தினர் உள்பட 6 பேருக்கு மேல் பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். இவ்விரண்டு தாக்குதல்களுக்கும் பலோசிஸ்தான் லிபெரேஷன் ஆர்மி பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.