மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பட்டாசு ஆலை விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம்

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு.

News image

முதல்வர் ஸ்டாலின்.(கோப்புப்படம்)

Updated On :4 ஜனவரி 2025, 7:27 am

DIN

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் சாய்நாத் பட்டாசு ஆலையில் இன்று(சனிக்கிழமை) காலை திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இரண்டு பேர் காயமுற்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரத்தில் சிவகாசி ஆலமரத்தப்பட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான சாய்நாத் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 50- க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.

இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் வழக்கம்போல் இன்று காலை பணியைத் துவங்கினர். அப்போது உராய்வு காரணமாக ரசாயன அறையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது.

வெடிச்சத்தம் கேட்டவுடன் பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு ஆலையை விட்டு வெளியேறினர்.

Story image

இந்த வெடிவிபத்தில் பணியில் இருந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த சிவகுமார், குருந்தமடத்தைச் சேர்ந்த காமராஜ், வேல்முருகன், வீரார்பட்டியைச் சேர்ந்த கண்ணன், செட்டிகுறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே இடுபாடுகளில் சிக்கி பலியாகினர். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

வச்சக்காரப்பட்டி போலீசார் இடிபாடுகளில் சிக்கி இருந்த சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள உரிமையாளர் பாலாஜி, சசிபாலன், மேனேஜர் தாஸ் பிரகாஷ், பேர்மென் சதீஸ்குமார் ஆகிய 4 பேரைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று (4.1.2025) காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் (வயது 56) த/பெ. சிவசுப்பிரமணியன், குருந்தமடத்தைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 54) த/பெ. கோபால் மற்றும் காமராஜ் (வயது 54) த/பெ. சுப்பு, வீரார்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (வயது 54) த/பெ. ராமசாமி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (வயது 46) த/பெ.சக்திவேல், செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 37) த/பெ. ராஜாமணி ஆகிய 6 நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதீன் என்பவருக்கு சிறப்பு சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.