/

மியான்மர்: கடத்தப்பட்ட சீன நடிகரை வைத்து மோசடி!

தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்தப்பட்ட சீன நடிகரைப் பற்றி...

News image
மீட்கப்பட்டுள்ள சீன நடிகர் வாங் ஸிங்- AP
Updated On :9 ஜனவரி 2025, 8:09 am

DIN

மியான்மர் நாட்டில் மோசடிப் பணியில் ஈடுபடுத்துவதற்காக தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்தப்பட்ட சீன நடிகர் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.

சீன நாட்டைச் சேர்ந்த நடிகர் வாங் ஸிங் தாய்லாந்து நாட்டிற்கு சென்றிருந்தபோது மியான்மர் எல்லையில் காணாமல் போனார். இதனைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் தாய்லாந்திலுள்ள சீன தூதரகத்தின் உதவியை நாடிய நிலையில், அவர் மியான்மர் நாட்டிற்கு கடத்தப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த ஜன.7 அன்று மியான்மr நாட்டிலிருந்து அவரை தாய்லாந்து அழைத்து வந்த அந்நாட்டு அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

இதுகுறித்து, அவர் கூறுகையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல பொழுதுபோக்கு நிறுவனம் ஒன்று நடிகராக வேலை வாங்கித் தருவதாகக் கூறியதைத் தொடர்ந்து அவர் அந்நாட்டிற்கு வந்துள்ளார். ஆனால், அந்நிறுவனம் அவருக்கு கூறியதைப் போல் நடிக்கும் வேலை எதுவும் வழங்காமல் அவரை எல்லையைக் கடந்து மியான்மர் நாட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு இயங்கும் மோசடி கும்பல்களிடம் ஒப்படைக்கப்பட்ட அவரை அவர்கள் மொட்டை அடித்து சீன மக்களை குறிவைத்து செல்போன் மூலம் நடத்தப்படும் மோசடி அழைப்புகளை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர்.

மியான்மர் நாட்டின் சிலப் பகுதிகளில் இயங்கி வரும் இந்த கும்பல்களின் மோசடி செயல்கள் பெரும்பாலும் சீன மக்களை குறிவைத்து நடத்தப்படுகின்றன. அவர்களிடம் செல்போன் அழைப்புகள் மூலம் பேசி அவர்களது அந்தரக விஷயங்களை வைத்து மிரட்டியும், மோசடிக்கான முதலீடு திட்டங்களின் மூலமாகவும் அவர்களிடம் பணம் பறித்து வருகின்றனர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை தரகர்கள் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்து சென்று மியான்மரில் இந்த மோசடி அழைப்புகள் செய்யும் பணியில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

மேலும், தற்போது மீட்கப்பட்டுள்ள சீன நடிகர் கூறியதின் அடிப்படையில் அவரைப் போலவே 50க்கும் மேற்பட்ட சீனர்கள் அந்த கும்பலிடம் சிக்கி மொட்டை அடிக்கப்பட்டு மோசடி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, சீன அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கைகளின் மூலம் இது மாதிரியான மோசடி கும்பல்களை கண்டுபிடித்து அவர்களை கைது செய்துள்ளதாகவும், அதன் மூலம் ஆயிரக்கணக்கான சீனர்கள் நாடுத் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நடவடிக்கைகளின் மூலம் அந்த கும்பல்களின் முக்கியப்புள்ளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சீனாவில் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலாமன நடிகர் வாங் ஸிங்கின் காதலி முதன்முதலில் இணையத்தில் தாய்லாந்து சென்ற அவரைக் காணவில்லை என பதிவிட்டிருந்தது வைரலானதைத் தொடர்ந்து அவர் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.