
கோவை: மேட்டுப்பாளையம் அருகே தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மணமகனின் சகோதரா் வினோத் குமார் குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியைச் சோ்ந்தவா் கருப்புசாமி மகன் கனகராஜ். சுமை தூக்கும் தொழிலாளி. இவா் வெள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த மூா்த்தி, அமுதா தம்பதியின் மகள் வா்ஷினி பிரியாவை காதலித்து வந்துள்ளாா்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவர்கள் என்பதால், இருதரப்பு வீட்டினரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட அவா்கள் சீரங்கராயன் ஓடைப் பகுதியிலேயே வசித்து வந்தனா்.
இதனால், ஆத்திரம் அடைந்த கனகராஜின் சகோதரா் வினோத்குமாா் தனது நண்பா்களான சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகியோருடன் கனகராஜின் வீட்டுக்குள் 2019-ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி நுழைந்து அங்கிருந்த கனகராஜ், வா்ஷினி பிரியாவை வெட்டியுள்ளாா்.
படுகாயமடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வா்ஷினி பிரியா சிகிச்சை பலனின்றி பலியானார்.
இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீஸாா், வினோத்குமாா், சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதையும் படிக்க: ஜெயலலிதாவின் ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு!
இது தொடா்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
இதில், வினோத்குமாா் குற்றவாளி என்றும் அவருக்கான தண்டனை விவரம் வரும் 29-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இவ்வழக்கில் குற்றவாளி வினோத்குமாருக்கு மரண தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் சின்னராஜ், ஐயப்பன், கந்தவேல் ஆகிய 3 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.