மூலிகைச் சமையல் பயிற்சி பெற ஆர்வம் உண்டா? அப்படியெனில் மறவாமல் நாளை கலந்து கொள்ளுங்களேன்!
By DIN | Published On : 30th July 2019 02:32 PM | Last Updated : 30th July 2019 02:32 PM | அ+அ அ- |

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், மூலிகை சமையல் தொடர்பாக ஒருநாள் பயிற்சி ஆகஸ்ட் 1-ஆம் தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது.
மூலிகை சமையல் என்றதும், அது ஏதோ நோயாளிகளுக்கு என்று நினைத்து விடத் தேவையில்லை. மூலிகை சமையல் என்பது, நாம் தினமும் தென்னகச் சமையல் அறைகளில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமே மஞ்சள், கொத்துமல்லி விதை, மிளகு, சுக்கு, இஞ்சி, கடுக்காய், வெந்தயம், சீரகம், துளசி போன்ற எல்லோருக்கும் தெரிந்த மூலிகை சமையல் இடுபொருட்களுடன் நாம் அதிகம் அறிந்திராத திப்பிலி, வசம்பு, கருஞ்சீரகம், ஜாதிக்காய், அத்திக்காய் உள்ளிட்ட வேறு பல மூலிகை இடுபொருட்களையும் பயன்படுத்தி சத்தான சமையலை எப்படிச் செய்வது என்று கற்றுக் கொடுப்பதே மூலிகை சமையல் என்று இங்கு குறிப்பிடப்படுகிறது.
இதன் முக்கியமான நோக்கமே, நமது இல்லங்களில் மூலைகைச் சமையல் செய்து உண்பது மட்டுமல்ல; புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதும் தான்.
சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை கிண்டியில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், மூலிகை சமையல் தொடர்பாக ஒருநாள் பயிற்சி வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெறுகிறது.
ஒருநாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.650. இந்தப் பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை நடைபெறுகிறது. பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-22250511 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல்தளம், சிப்பெட் எதிரில், கிண்டி, சென்னை 600 032 -என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்தத் தகவல் அந்த மையத்தின் தலைவர் ஆ.சதாசக்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...