வரலாற்று ஆசிரியர் ஜீன் எட்வர்ட் ஸ்மித் மரணம். அவருக்கு வயது 86. ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் உலிசிஸ் கிராண்ட் புத்தகங்கள் மூலம் உலகறியப்பட்ட ஜீன் எட்வர்ட் ஸ்மித், டொராண்டோ பல்கலைக்கழகத்தின் நெடுங்காலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மித் இதுவரை 12 க்கும் மேற்பட்ட வரலாற்றுப் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றில் பெரும்பான்மையானவை அமெரிக்க அதிபர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தங்களாகவே அமைந்து விட்டன.
2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘கிராண்ட்’ புலிட்ஸர் விருதின் இறுதிச் சுற்று வரை சென்று வந்த பெருமையை ஈட்டியது. ஸ்மித் எழுதிய ரூஸ்வெல்ட், எஃப் டி ஆர் புத்தகம் 2007 ஆம் ஆண்டுக்கான ஃப்ரான்ஸிஸ் பார்க்மேன் பரிசை வென்றது. வெகு சமீபத்தில் அதாவது 2016 ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க அதிபரான ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷை விமர்சித்து எழுதிய ‘புஷ்’ புத்தகம் இன்றளவும் அமெரிக்காவின் பெஸ்ட் செல்லரில் ஒன்று. இவை மட்டுமல்ல, முன்னாள் அமெரிக்க அதிபரான ஐசனோவர் மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஜான் மார்ஷல் ஆகியோர் குறித்தும் மிகச்சுவையான வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார் ஜீன் எட்வர்ட் ஸ்மித்.