தினமும் 10 நிமிடம் ஓடுவது மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும் என்றும் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் 'சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ் ஜர்னல்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
ஜப்பானில் உள்ள சுகுபா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ் என்ற மூளையின் முன்புறணிப் பகுதியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது இந்த ஆய்வில் பங்கேற்றவர்களை, உடற்பயிற்சி செய்யும் உபகரணமான 'த்ரெட் மில்'லில் 10 நிமிடம் ஓட அறிவுறுத்தப்பட்டது. இதனை தினமும் தொடர்ந்து செய்யும்போது அவர்களின் மனநிலை குறித்தும் கேட்கப்பட்டது.
அப்போது உடற்பயிற்சி செய்வது, மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பி மூளையில் ஆக்சிஜன் அளவை அதிகரித்தது. அதுமட்டுமின்றி மகிழ்ச்சியான ஒரு மனநிலையையும் ஏற்படுத்தியது தெரிய வந்தது.
ஓடுவதனால், பெருமூளை தமனியில் ரத்த ஓட்டத்தின் வேகம் அதிகமாவதால் மூளையின் செயல்பாட்டிற்கு பயனளிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், மூளையின் முன்புறணி பகுதியைத் தூண்டுவதன் மூலமாக மூளை சிறப்பாக செயல்படும், மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.