/

ஈரோட்டில் தாமதமாகத் தொடங்கிய வாக்குப்பதிவு

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லக்காபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு பயன்படுத்தப்படும் மைப் பெட்டி (ஸ்டாம்ப் பேடு) வேலை செய்யாததால் சிறிது நேரம் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:42 pm

DIN

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லக்காபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு பயன்படுத்தப்படும் மைப் பெட்டி (ஸ்டாம்ப் பேடு) வேலை செய்யாததால் சிறிது நேரம் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனை அடுத்து வேட்பாளரே ஸ்டாம்ப் பேடு வாங்கி கொடுத்ததால் தொடர்ந்து வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, தாளவாடி, டி.என் பாளையம் மற்றும் நம்பியூர் உள்ளிட்ட 7 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 874 பதவியிடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 2,760 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 657 வாக்குசாவடிகளில் 70 வாக்குசாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் பணிகளில் 4,645 அரசு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, ஈரோடு ஊராட்சி ஒன்றியம் லக்காபுரம் ஊராட்சிமன்றத்திற்குட்பட்ட 21,22,23 மற்றும் 24 ஆகிய வாக்குசாவடிகளில் வாக்களிக்க பயன்படும் மைப் பெட்டி (ஸ்டாம்ப் பேடு) சரியாக வேலை செய்யவில்லை. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அதனைப் புதிதாக வாங்கி கொடுத்ததை தொடர்ந்து அனைவரும் வாக்களித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.