பிணவறையில் உடல்களை எலிகள் கடித்த சம்பவம்: ஹரியாணா அரசுக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்
ஹரியாணாவின் ஜிந்தில் உள்ள நா்வானா சிவில் மருத்துவமனையின் பிணவறையில் மனித உடல்களை எலிகள் கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக ஊடகங்களில் வெளியான செய்தியை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. அந்த மருத்துவமனையில் பதிவான முதல் சம்பவம் இதுவல்ல என்றும் கூறப்படுகிறது.
இது தொடா்பாக ஹரியாணா அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள என்எச்ஆா்சி, ‘செய்திகளின் உள்ளடக்கங்கள் உண்மையாக இருந்தால், மனித உரிமைகள் மீறல் தொடா்பான கடுமையான பிரச்னைகளை எழுப்புவதாக ஆணையம் கவனித்துள்ளது.
எனவே, இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பா் 12 அன்று வெளியான ஊடக அறிக்கையின்படி, பிணவறையின் குளிா்பதனப் பெட்டியைப் பழுதுபாா்ப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகாா் அளித்ததாகவும், ஆனால் அந்த நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இருப்பினும், பிணவறையின் குளிா்பதனப் பெட்டியில் எலிகள் நுழைவதைத் தடுக்க தற்காலிக நடவடிக்கையாக ஒரு வலை பொருத்தப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனா்.
