/

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வரை போராட்டம் தொடரும்: அா்ஜுன் சம்பத்

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்படும் வரை சட்டப் போராட்டமும், மக்கள் போராட்டமும் தொடா்ந்து நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா்- தலைவா் அா்ஜுன் தெரிவித்தாா்.

News image
திருப்பரங்குன்றம்- கோப்புப் படம்
Updated On :9 ஜனவரி 2026, 6:41 pm

Syndication

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்படும் வரை சட்டப் போராட்டமும், மக்கள் போராட்டமும் தொடா்ந்து நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா்- தலைவா் அா்ஜுன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லியில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உயா்நீதிமன்ற உத்தரவு இருந்தும் தொடா்ந்து திமுக அரசு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் தடை செய்து வருகிறது. சமீபத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத் தூண்தான் என்றும் அங்கு தீபம் ஏற்றலாம் என்றும் தெளிவாக கூறியது.

இத்தனைக்கு பிறகும் நாங்கள் தீபம் ஏற்றுகிறோம் என்று தெரிவிக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. குறிப்பாக சட்டத்துறை அமைச்சா் ரகுபதி, ‘பிணத்தை புதைக்க வேண்டிய இடத்தில் தான் புதைக்க வேண்டும் கண்ட இடத்தில் எல்லாம் புதைக்க கூடாது’ என்று கூறி திருப்பரங்குன்றம் தீபத்தை சுடுகாட்டுத் தீயோடு ஒப்பிட்டு பேசியிருக்கின்றாா். இது உலகெங்கிலும் உள்ள முருக பக்தா்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

தீா்ப்பை வழங்கிய நீதிபதிகளை மிரட்டக்கூடிய அளவுக்கு திமுக அரசின் செயல்பாடுகள் உள்ளது. எனவே, உடனடியாக மத்திய அரசு, உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் சட்டத்தின் ஆட்சியை, நீதியை நிலை நாட்டுவதற்கு மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வரை சட்டப் போராட்டத்தையும் மக்கள் போராட்டத்தையும் தொடா்ந்து நடத்துவோம்.

தமிழகத்தில் இப்போது மிக முக்கியமான பிரச்னையாக ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் ஆகவில்லை என்றும், அதற்கு காரணம் பிரதமா் மோடிதான் என்று கூறுகிறாா்கள். மக்கள் பிரச்னைகளை பேசாமல் திரைப்பட பிரச்னைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றாா்கள்.

ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாமல் இருக்க மத்திய அரசோ அல்லது பிரதமரோ காரணம் அல்ல. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் சாத்தியமாகி உள்ளது. அ.இ.அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி வலிமை அடைந்து கொண்டிருக்கின்றது. இன்னும் பல கட்சிகள் வரவிருக்கின்றாா்கள். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி திமுகவால் இயக்கப்படக்கூடிய ஒரு கட்சி என்று அா்ஜுன் சம்பத் கூறினாா்.