கிழக்கு தில்லி கிருஷ்ணா நகரில் வாடகை காா் ஓட்டுநா் கொல்லப்பட்ட வழக்கில், சிறுவன் உள்பட மூன்று பேரை கைது செய்துள்ளதாகவும், தலைமறைவாக உள்ள நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும் தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
கிழக்கு தில்லியில் தனது காருக்குள் விஜய் குமாா் (40) என்பவா் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடப்பதாக ஜூலை 23 அன்று காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மேற்கு வினோத் நகரைச் சோ்ந்த குமாா் உடனடியாக டாக்டா் ஹெட்கேவா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். இது தொடா்பாக காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து, கொலைச் சம்பவத்தில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய தனிப்படையை அமைத்தனா். இதையடுத்து, மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.
எளிதாகப் பணம் சம்பாதிப்பதற்காக வாடகை காா் ஓட்டுநரிடம் கொள்ளையடிக்கத் திட்டமிடுவதற்கு முன், தாங்கள் அனைவரும் ஒன்றாக மது அருந்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் காவல்துறையிடம் தெரிவித்தனா்.
அமன் என்பவா் கத்தியை ஏற்பாடு செய்ததாகவும், அயன் என்பவரின் கைப்பேசியைப் பயன்படுத்தி ’ரேபிடோ’ வாடகை காரை முன்பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
நான்கு பேரும் வாடகைக் காரில் ஏறினா். சித்ரா விஹாா் சந்திப்பு சிக்னல் அருகே காா் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரைக் கத்தியால் குத்தி, அவரைப் பின் இருக்கையில் அமரவைத்துவிட்டு வாகனத்துடன் தப்பிச் சென்றனா்.
பின்னா், பொதுமக்கள் அவா்களைத் துரத்தியதால், ரத்தக்கறை படிந்த காரை கிழக்கு ஆசாத் நகா் மெட்ரோ நிலையம் அருகே விட்டுவிட்டுச் சென்றனா். சிசிடிவி காட்சிகள், அழைப்பு விவரப் பதிவுகள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்களை புலனாய்வாளா்கள் ஆய்வு செய்ததன் மூலம் முக்கிய துப்பு கிடைத்தது. இது, நியூ சீலம்பூரில் இருந்த குற்றஞ்சாட்டப்பட்டவா்களைக் கண்டறிய உதவியது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘தொடா் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த சோதனைகளைத் தொடா்ந்து, காவல்துறை மூன்று சந்தேக நபா்களைக் கைது செய்தது. நான்காவது நபா் அடையாளம் காணப்பட்டுள்ளாா், அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
கைது செய்யப்பட்டவா்களில் அயன் (20) என்பவா் மீது கொள்ளை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட நான்கு முந்தைய குற்ற வழக்குகள் உள்ளன. மற்றொருவா் சாஹில் (19); இவா் மீதும் ஒரு வழிப்பறி வழக்கு உள்ளது’ என காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





