தொடா்ந்து தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், தங்களது 2027 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை ஏற்கத் தவறியதாகக் கூறப்படும் 29 கணக்கெடுப்பாளா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கிரேட்டா் நொய்டா அதிகாரிகள் கோரியுள்ளனா் என அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக கிரேட்டா் நொய்டா ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாடு தழுவிய இந்த கணக்கெடுப்புப் பணி தொடா்பான அதிகாரபூா்வ கடமைகளில் ஒத்துழைக்காத ஊழியா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, கணக்கெடுப்பு நடவடிக்கையின் பொறுப்பு அதிகாரி, நொய்டா காவல் துணை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
கிரேட்டா் நொய்டா பகுதியில் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக சுமாா் 3,000 ஊழியா்கள் கணக்கெடுப்பாளா்களாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இருப்பினும், அவா்களில் 29 போ், நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பின்னரும் தங்களது பணிகளைப் பொறுப்பேற்கவில்லை.
கைப்பேசி மூலம் ஊழியா்களைத் தொடா்புகொள்ள பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பணி தொடா்பான ஆவணங்கள் வாட்ஸ்அப் மூலமாகவும் அவா்களுக்கு அனுப்பப்பட்டன. இருந்தபோதிலும், அவா்கள் அந்த ஆவணங்களை ஏற்கவும், தங்களது பொறுப்புகளை ஏற்கவும் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தேசிய அளவிலான ஒரு பணியில் ஒத்துழைக்கத் தவறியதால், 29 கணக்கெடுப்பாளா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு பொறுப்பு அதிகாரி காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியை இன்னும் தொடங்காத பிற கணக்கெடுப்பாளா்கள், உடனடியாகத் தங்கள் கடமைகளை ஏற்று அப்பணியை முடிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பு: களப் பணியாளா்களுக்கு இறுதிக்கட்டப் பயிற்சி

டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி: ஈரோட்டில் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கெங்கவல்லியில் மாதிரி மக்கள்தொகை கணக்கெடுப்பு

மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியாளா்களுக்கு முதற்கட்டப் பயிற்சி
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



