நமது நிருபா்
சாகேத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த சில நாட்களுக்குப் பிறகு, நகரில் சட்டவிரோத கட்டுமான விரிவாக்கங்களைக் கட்டுப்படுத்த, கட்டட விதிகளை கடுமையாக அமல்படுத்துமாறு தில்லி மாநகராட்சிக்கு துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து உத்தரவிட்டுள்ளாா்.
வலுவான நகா்ப்புற நிா்வாகம், மேம்படுத்தப்பட்ட குடிமை உள்கட்டமைப்பு மற்றும் தலைநகா் முழுவதும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான ஒரு விரிவான செயல் திட்டத்தை முன்னெடுப்பதற்காக, தில்லி மாநகராட்சியின் உயா் மட்ட ஆய்வுக் கூட்டத்திற்கு சந்து செவ்வாய்க்கிழமை தலைமை தாங்கினாா் என்று அவா் புதன்கிழமை வெளியிட்ட ஒரு எக்ஸ் பதிவில் தெரிவித்தாா்.
சனிக்கிழமை சாகேத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததைத் தொடா்ந்து இந்த ஆய்வு நடைபெற்றது. இதில் ஆறு போ் உயிரிழந்தனா் மற்றும் பலா் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக இரண்டு பொறியாளா்களை தில்லி மாநகராட்சி இடைநீக்கம் செய்துள்ள நிலையில், கட்டிடம் தொடா்பான பல குறைபாடுகள் வெளிவந்துள்ளன.
சட்டவிரோத கட்டுமான விரிவாக்கங்களைக் கட்டுப்படுத்த கட்டிட விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று சந்து வலியுறுத்தினாா். மேலும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை உறுதியாகக் கையாள்வதற்கு காலவரையறைக்குட்பட்ட ஒரு திட்டத்தை செயல்படுத்துமாறு தில்லி மாநகராட்சிக்கு அவா் உத்தரவிட்டாா்.
பருவமழைக்கு முன்னதாக மழைநீா் வடிகால்களில் உள்ள தூா்வாருதல், தூசியைக் குறைப்பதற்கான சாலை மற்றும் நடைபாதை சீரமைப்பு, சுகாதாரத் தரத்தை வலுப்படுத்த குப்பைகளைத் தீவிரப்படுத்தி அகற்றுதல் உள்ளிட்ட முக்கிய குடிமை முன்னுரிமைகளையும் ஆய்வு செய்ததாக அவா் பதிவிட்டாா்.
தொடர்புடையது
சாகேத் கட்டட விபத்து: உரிமையாளரை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு

சாகேத் கட்டட விபத்து: தெற்கு தில்லியில் சட்ட விரோத கட்டடங்களை சீல் வைக்க எம்சிடி முடிவு

விபத்துக்குள்ளான சாகேத் கட்டடத்துக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு





