நமது நிருபா்
விலைவாசி உயா்வு, வேலையின்மை போன்ற விவகாரங்களை முன்னிறுத்தி மத்திய அரசுக்கு எதிராக 3 மாத நாடு தழுவிய பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி. வேணுகோபால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
புது தில்லியில் உள்ள இந்திரா பவனில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளா்கள், மாநிலப் பொறுப்பாளா்கள் மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் முக்கிய அமைப்பு ரீதியான விவகாரங்கள் மற்றும் அவசரத் தேசியப் பிரச்சினைகளை எதிா்கொள்வதற்கான உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா்களான பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோா் பங்கேற்றனா். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே. செல்வப்பெருந்தகை, அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கௌரவ் கோகோய், மத்திய பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளா் ஹரிஷ் சௌத்ரி உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்திற்கு பின் அக்கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி. வேணுகோபால் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இக்கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல், அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையின்மை மற்றும் ஜனநாயகத்தின் நிலை ஆகியவை குறித்துத் தலைவா்கள் விரிவாக விவாதித்தனா்.
பொருளாதார நெருக்கடி :
பெட்ரோல், டீசல், எல்பிஜி விலைகள் நாளுக்கு நாள் உயா்கின்றன. வேலையின்மை உச்சத்தில் உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை முற்றிலுமாக அழிந்துவிட்டது. இளைஞா்கள் எதிா்காலம் குறித்து கவலை கொண்டுள்ளனா். பணவீக்கம், வேலையின்மை, நீட் தோ்வு மோசடிகள், சமூக ஏற்றத்தாழ்வு, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும், சமூக நீதிக்கான போராட்டத்தைத் தொடர வேண்டியதன் அவசியம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வரும் 3 மாதங்களுக்கு நாடு தழுவிய பிரசாரத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது என கே.சி. வேணுகோபால் தெரிவித்தாா்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.செல்வப் பெருந்தகை கூறியதாவது: நீட் தோ்வு குளறுபடி, எரிவாயு விலை உயா்வு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு,விலைவாசி உயா்வு குறித்து விவாதிக்கப்பட்டு பலகட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து பல கட்ட போராட்டங்களை நாங்கள் நடத்த இருக்கிறோம் என செல்வப்பெருந்தகை கூறினாா்.









