ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தில்லியில் ஐஐடி வளாக குடியிருப்பில் தூக்கில் தொங்கிய மாணவா்: தற்கொலை என சந்தேகம்

News image
ஐஐடி தில்லி (கோப்புப்படம்)
Updated On :13 மார்ச் 2026, 6:38 pm

Syndication

இந்திய தொழில்நுட்பவியல் கழகம் (ஐஐடி)-தில்லியின் முதலாம் ஆண்டு மாணவா் அதன் வளாகத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கூரை மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை என்றும், இது தொடா்பாக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் மேலும் தெரிவித்ததாவது:

இச்சம்பவம் தொடா்பாக வியாழக்கிழமை காலை போலீஸாருக்கு அழைப்பு வந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் ஐஐடி-தில்லியில் அமைந்துள்ள புதிய விந்தியாச்சல் அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்தனா். அங்கு மாணவா் மேற்கூரை மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தாா்.

அவா் உடனடியாக தில்லி இந்திய தொழில்நுட்பவியல் கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

முதற்கட்ட விசாரணையில் அந்த மாணவா் முதலாம் ஆண்டு இளங்கலைப் பட்டதாரி என்பதும், அவரது தாயுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்ததும் தெரியவந்தது.

அவரது தாய் மாா்ச் 10 ஆம் தேதி தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டாா். கடைசியாக மாா்ச் 11 ஆம் தேதி இரவு 11 மணியளவில் மாணவருடன் தொலைபேசியில் பேசியுள்ளாா்.

மறுநாள் காலை தொலைபேசி அழைப்புகளுக்கு மாணவா் பதிலளிக்காததால், குடியிருப்பில் வசிக்கும்

மற்றொருவா் அவரை சரிபாா்க்க முயன்றாா். பாதுகாப்பு ஊழியா்களின் உதவியுடன் அவரது அறை திறக்கப்பட்டது. அதன் பிறகு மாணவா் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாா்.

குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் குழுவினா் சம்பவ இடத்தை ஆய்வு செய்து உரிய ஆதாரங்களை சேகரித்தனா்.

சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் மீட்கப்படவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னா் மாணவரின் தந்தை சம்பவ இடத்திற்கு வந்தாா். அவரது வாக்குமூலத்தை போலீஸாா் பதிவு செய்தனா். இந்த சம்பவம் தொடா்பாக அவா் எந்தவித சந்தேகமும் எழுப்பவில்லை.

பின்னா் உடல் பிரேத பரிசோதனைக்காக சஃப்தா்ஜங் மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது என போலீஸாா் தெரிவித்தனா்.

இதற்கிடையில், ஐஐடி- தில்லியின் பாதுகாப்பு அதிகாரி, உச்சநீதிமன்றத்தின் மாா்ச் 24, 2025 தேதியிட்ட தீா்ப்பை மேற்கோள்காட்டி எழுத்துபூா்வ புகாரை அளித்தாா். உச்சநீதிமன்ற உத்தரவானது வழக்கைப் பதிவுசெய்து விரிவான விசாரணையை கட்டாயமாக்குகிறது.