ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் ஸ்ரீ பிச்சாண்டவர் வெள்ளை சாற்றில் புறப்பாடு நடைபெற்றது. கோயிலுக்குள் இரு பிரகாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
ஸ்ரீ கைலாசநாதர் கோயில் சார்பில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. சிவபெருமாள் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையார் இல்லத்துக்கு உணவருந்த செல்லும் முக்கிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. முன்னதாக ஸ்ரீ பிச்சாண்டவர் வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு புறப்பாடு செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுவாமியின் முகமும், உடலின் சில பகுதிகளைத் தவிர மற்ற இடங்கள் யாவும் வெள்ளை நிற மலர்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூலஸ்தானத்திலிருந்து சுவாமியை சுமந்தவர்கள், பிரகாரத்தில் சுவாமியை இடது, வலது புறம் வளைத்தும், வேகமாக முன்னோக்கியும், பின்னோக்கியும் கொண்டு சென்றனர். பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்தனர்.
அம்மையார் இல்லத்தில் அமுதுண்ண செல்லும் ஸ்ரீ பிச்சாண்டவருக்கு முன்கூட்டியே இவ்வகை சிறப்பு அலங்காரம் செய்து கோயிலின் இரு பிரகாரங்களிலும் வலம் வரச் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு இன்னிசை நடைபெற்றது. கோயில் வளாகம் நிரம்பி பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்தனர். இரவு தம்பதிகளான காரைக்கால் அம்மையாரும், பரமதத்தரும் முத்துச்சிவிகையில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.