நோய் பற்றி ஜோதிடம் கூறும் முன்னெச்சரிக்கைகள்!

நோய் பற்றி ஜோதிடம் கூறும் முன்னெச்சரிக்கைகள்!

ஒருசில லக்கினகாரர்களுக்க நோய் வந்தால் அது குணமாக நீண்ட காலம் எடுக்கும். அதைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

ஜோதிட ரீதியாக 27 நட்சத்திரக்காரர்கள், 12 ராசியினர் என அனைவருக்கும் நோய் வரும். ஒருசில லக்கினகாரர்களுக்க நோய் வந்தால் அது குணமாக நீண்ட காலம் எடுக்கும். அதைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

மிதுன ராசி / லக்கினகாரர்களுக்கு நோய் வரும் போகும். ஆனால், விருச்சிக ராசி / லக்கினகாரர்களுக்கு நோய் வந்தால் அது குணமாவதற்கு நீண்ட காலமாகும். மேலும், லக்கின பரல்கள் குறைவாகவும், 6ஆம் இடப் பரல்கள் அதிகமாகவும், சர்வாஷ்டக முறையில் இருப்பின் வாழ்நாள் முழுவதும் நோயாளிகளாக இருந்து துயரப்படுவர்.

நோய் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்...

ஒருவருக்கு ஏற்படும் நோய் உடலை பாதிப்பது மட்டுமல்லாமல் உயிரையும் பாதிக்கும். சந்திரன் மட்டும் சார்ந்த நோய்கள், உடலளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் நோய்களாக இருக்கும்.

லக்கினம் அதிபதி சார்ந்த நோய்களானால் உடலையும் பாதித்து, உயிரையும் பாதிக்கும் அளவில் வரும் நோய்களாக இருக்கும். நோய் வரும் காலங்களைப் பொருத்து ஜாதகரின் ஜாதகத்தில் வரும் தசா புத்தி, அந்தரம் நடக்கும் காலங்களில் வருவது.  ஜாதகத்தில், கிரகங்களின் கோட்சாரம் காலத்தில் வருவது .

மருத்துவர் ஒருவரே, நோயும் ஒன்றே - ஆனால் நோயாளி வெவ்வேறாக இருப்பதாலும் அவர்களின் ஜாதகத்தில் நோயைத் தரும் கிரகங்களின் அமர்வு த்ரேக்காணம் வெவ்வேறாக இருந்து பலன் அளிப்பதைக் காண முடிகிறது.

உதாரணத்திற்கு, ஒருவரின் ஜாதகத்தில் முதல் த்ரேக்காணத்தில் செவ்வாயும், சந்திரனும் இருப்பதாகக் கொண்டால், செவ்வாய் வேகமாக செயல்படும் கிரகம் அதனால், செவ்வாய் ஆதிக்க மருந்துகள் வேகமாக செயல் படும், நோயை குணப்படுத்தும்... சந்திர ஆதிக்கமுள்ள, மருந்துகள் நோய் குணமாவதைத் தாமதப்படுத்தும்... அல்லது நோயைக் குணப்படுத்த மருந்தின் அளவு போதுமானதாக இருக்காது.

முதலில் த்ரேக்காணம் என்னவென்றால், ஒவ்வொரு கிரகமும் முதல் 10 பாகைக்குள் இருந்தால் அது முதல் த்ரேக்காணத்தில் உள்ளது எனலாம். அடுத்து 11 முதல் 20 பாகைக்குள் இருந்தால் அது இரண்டாவது த்ரேக்காணம் ஆகும். 21 முதல் 30 பாகைக்குள் ஒரு கிரகம் இருப்பின் அது மூன்றாவது த்ரேக்காணம் ஆகும்.

முதல் த்ரேக்காணத்தில் இருக்கும் சூரியனும், செவ்வாயும் வேகமாகவும், வீரியமாகவும் செயல்படும். இரண்டாவது த்ரேக்காணத்தில் இருக்கும் குரு, சுக்கிரன் வேகமாகவும் , வீரியமாகவும் செயல்படும். மூன்றாவது த்ரேக்காணத்தில் இருக்கும் சந்திரனும், சனியும் வேகமாகவும் , வீரியமாகவும் செயல்படும். புதன், ராகு, கேது இம்மூன்று கிரகங்களும் மூன்று த்ரேக்காணத்திலும் வேகமாகவும் , வீரியமாகவும் செயல்படும்.

உதாரணமாக செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் முதல் த்ரேக்காணத்தில் இருந்தால் செவ்வாய் அறுவை சிகிச்சையைக் குறிப்பதால் செய்த அறுவை சிகிச்சை வேகமாகப் பலனளிக்கும். அதே செவ்வாய், மூன்றாவது த்ரேக்காணத்தில் இருந்தால் செய்த அறுவை சிகிச்சை மெதுவாகப் பலனளிக்கும்.

மேற்படி கூற்றினை ஆய்ந்தே ஒருவருக்கு எப்படிப்பட்ட மருத்துவச் சிகிச்சை அளிக்கமுடியும் என்பதனை அறிந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

ஒருவரின் உடல் நலமாக இருக்கிறது என்றால், அவரின் ஜாதகத்தில் :-

1. லக்கினம் கெடாமல் இருத்தல் அவசியம்.

2. லக்கின அதிபதி கெடாமல் இருத்தல் அவசியம்.

3. ஆறாம் பாவத்தில், பாவ (அசுப ) கிரகம் இல்லாமல் இருத்தல்.

4. சந்திரன், சுப கிரகங்களின் தொடர்பில் இருத்தல்.

5. சர்வாஷ்டக முறைப்படி லக்கின பரல் ஆறாம் பாவ பரல்களைவிட அதிகமாக இருத்தல்.

மேற்சொன்ன அமைப்புள்ள ஜாதகருக்கு நிச்சயம் நல்ல உடல் நலத்துடன் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒருவரின், உடல் நலமில்லாமல், நோய்களுடன் இருப்பதற்குரிய அமைப்பு.

1. லக்கின அதிபதி பாதிக்கப்பட்டு இருத்தல்.

2. நீச்ச ராசியில் இருத்தல்.

3. அஸ்தங்கம் அடைந்திருந்தால்.

4. ராகு / கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தால்.

5. கிரக யுத்தத்தில் தோல்வி அடைந்திருந்தால்.

6. பரிவர்த்தனையில் பாதிக்கப்பட்டிருந்தால்.

7. லக்கினம், லக்கின அதிபதி பாவ கிரகங்களுடன் இருத்தல்.

8. லக்கின அதிபதி 6, 8, 12 க்கு உடையவர்களுடன் இருத்தல்.

மேற்சொன்ன அமைப்புள்ள ஜாதகருக்கு நிச்சயம் உடல் நலத்துடன் இருக்க வாய்ப்பில்லை. மேலும் ஜாதகர் வாழ்நாள் முழுவதும், நோய்களுடன் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஒருவருக்கு ஏற்பட்ட நோயின் தன்மையை வீரியபடுத்தி அவரை இறப்பின் வாசலுக்குக் கொண்டுசெல்வது, எட்டாம் அதிபதியும், எட்டில் நின்ற கிரகங்களும் முக்கியம் ஆகும்.

அதே போல் 8ஆம் இடத்தில் அதிக பரல்களைப் பெற்றிருப்பின் அவர்களுக்கும் நோயின் தீவிரம் அதிகமாக இருப்பதுடன், மருத்துவமனையில் தங்கி நோயினை சரி செய்ய வேண்டி வரும். இதனோடு 11 ஆம் பாவமும் இணைந்திருப்பின், மருத்துவம் முடிந்து நோயாளி வீடு திரும்ப நேரிடும். அதே சமயம் 12ஆம் பாவம் தொடர்பு கொண்டிருப்பேன் நோயாளி வீடு திரும்புவதில் சிக்கல் தான் என்பதனை அறியமுடிகிறது. இதில் நடப்பு தசை, புத்தி, கோசர நிலை ஆகியவற்றை ஆய்ந்தே முடிவு தெரியவரும்.

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com