கொடிமரத்தின் தத்துவமும்...முக்கியத்துவமும்

கோயிலில் கொடிமரம் இருப்பது "ஆலயம் புருஷாகாரம்' என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது.
கொடிமரத்தின் தத்துவமும்...முக்கியத்துவமும்

கோயிலில் கொடிமரம் இருப்பது "ஆலயம் புருஷாகாரம்' என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது. மனித உடலைப் போன்றது கோயில். கோயிலில் கருவறையே தலை. மகா மண்டபம் மார்புப் பகுதி, மார்பின் இடப்புறம் இதயம் துடிப்பது போல, நடராஜப் பெருமான் நடனமாடிக் கொண்டிருக்கிறார் என்பதாகும். அதனைத் தொடர்ந்து, வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்புள் பகுதியாக இருப்பது கொடிமரம்.

ராஜகோபுரம் இறைவனின் திருவடி. திருவிழாகாலத்தில் தேவர்களை அழைப்பதற்காகக் கொடிமரத்தில் கொடியேற்றி வழிபாடு நடத்துவர் என்பதே கொடிமரத்தின் தத்துவமாகும்.  

சரி, இதன் முக்கியத்துவம் என்ன?
ஆலயங்களில் 'துவஜஸ்தம்பம்' கொடிமரங்கள் மிகவும் புனிதமானவை. ஒரு ஆலயத்தை முழுமையடையச் செய்வது ஆலயத்தின் கொடி மரம் தான். கடவுளைக் காண முடியாவிட்டாலும் அங்குள்ள கொடி மரத்தை கைகூப்பி கும்பிடுவது அவசியம். ஏனென்றால் கொடி மரத்தின் வழியே கடவுள் ஆலயத்துக்குள் நுழைவதாக ஐதீகம்.

கொடி மரங்களுக்குக் கீழே விழுந்து வணக்கம் செலுத்துவது, இறை உருவங்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு ஒப்பாகும். கொடி மரத்தருகே நம் மனமாசுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். இறையருளைப் பெற நம்மைத் தகுதிப்படுத்திக் கொண்டு உள்ளே செல்வதற்கு கொடி மர வணக்கம் அவசியம்.

கோபுரத்திற்கும் இறைச் சந்நிதானத்திற்கும் இடையே கொடி மரம் அமைந்திருக்கும். அதிகபட்சமாக 13 மீட்டர் இடைவெளி கொண்டு கொடி மரம் அமைக்கப்படும்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் இணைந்ததாகக் கொடி மரம் கருதப்படுகிறது. அடிப்பாகம் சிவனையும், இடைப்பாகம் பிரம்மாவையும், மேல்பாகம் விஷ்ணுவையும் குறிக்கிறது.

மேலே உள்ள உலோகத் தகடுகள் இடி, மின்னல் தாக்குதகளிலிருந்து ஆலயத்தைக் காக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். உற்சவக் காலங்களில் கொடி ஏற்றுவது இந்தக் கம்பத்தில் தான். மனித உடலின் முதுகுத் தண்டைப் போல் ஆலயங்களின் முக்கிய பகுதியாக விளங்குவது கொடி மரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com