உங்கள் பிள்ளைகளுக்கு புண்ணியம் செய்வது எப்படியென்று சொல்லிக்கொடுத்ததுண்டா?

தொண்டு என்பது சேவை செய்வதைக் குறிப்பதாகும். நாட்டுக்குச் செய்யும் சேவைத் தொண்டு எனப்படும்
உங்கள் பிள்ளைகளுக்கு புண்ணியம் செய்வது எப்படியென்று சொல்லிக்கொடுத்ததுண்டா?

தொண்டு என்பது சேவை செய்வதைக் குறிப்பதாகும். நாட்டுக்குச் செய்யும் சேவைத் தொண்டு எனப்படும். இறைவனுக்குச் செய்யும் சேவை "திருத்தொண்டு" எனப்படும்.

"தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்பது ஔவையாரின் வாய்மொழி. இந்தக் கலியுலகில் நம் பிள்ளைகளிடம், நாம் அனுபவித்த கஷ்டங்களைச் சொல்லிப் பாருங்கள்,

இச்சொற்கள் பிள்ளைகள் செவிகளுக்குள் ஏற்றிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நாம் இருந்ததுபோல் பிள்ளைகள் இருக்கமாட்டார்கள். ஆனாலும், நாம் கஷ்டத்தை அனுபவித்து வந்ததுபோல், நம் பிள்ளைகளும் கஷ்ட வளையத்தில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக, மிக மிக கவனமெடுப்போம். பிள்ளைகளை வளர்ப்பு முதலிலிருந்து, ஒழுங்கு, கல்வி, ஆன்மிகம், வேலைப்பணி என்று தெரிந்து புரிந்து செய்து வருவோம்.

மேலும், சேமிப்பு ஒன்று வேனுமே?, அதற்காகவும் வங்கியிலும் சிறுக சிறுக சேமித்து வைப்போம். இந்த வரவு செலவினை நாமே கையாண்டு வந்தாலும், இறுதியில் இதனின் மீதி பிள்ளைகளின் வசதிக்காகவே விட்டுவைப்போம். பலருக்கும் இதுபோல் வாழ்க்கை இல்லாதும் இருக்கும். அன்றாடம் தினக்கூலி வேலைக்குச் சென்று அன்றைய வயிற்றுப் பாட்டை அன்றே கழித்து வரும் வாழ்க்கை அமைந்தோரும் இருப்பர்.

ஆனாலும், அரும்பாடுபட்டு, அறை வயிறு உண்டு, பிள்ளைகளின் விஷயத்தில், கல்வியையும் ஒழுங்கையும் கொடுத்துவிட வேண்டும் என்று அனைத்து தாய் தந்தையர்களும் நினைப்பர். பிள்ளைகளுக்குக் கல்வி ஒன்றைக் கொடுத்து விட்டோம். அவன் எப்படியாவது பிழைத்துக் கொள்வான் என்றும் நினைத்துக் கொள்வோம்.

படித்த படிப்பிற்கு அரசு வேலைக் கிடைக்கிறதோ!, இல்லையோ? ஒரு தனியார் நிறுவனத்திலாவது பணி செய்ய வாய்ப்பு நல்கியதே என்று ஈசனுக்கு நன்றி சொல்லிக் கொள்வோம் நாம். படிக்க வைத்தோம், ஒழுங்கைக் கற்றுக் கொடுத்தோம், வங்கியில் கணக்கு வைத்தோம் எல்லாம் சரி,.....ஆனால், புண்ணியத்தைச் சேமிக்கும் வழமையைச் சொல்லிக் கொடுத்தோமா? என்று பார்க்க வேண்டும்!

நாம் புண்ணியம் செய்தொழுகும் வழமையைக் கொண்டிருந்தால்தான், நம் பிள்ளைகளும் அந்த வழமையைக் கையிலெடுக்கும். நம் தாய், தந்தையர் செய்துவரும் புண்ணியம், நமக்கே தனமாகிறது என்பதைப் பிள்ளைகள் உணரும்போதுதான், அவன் வாழ்க்கையை அவன் வாழ ஆரம்பிக்கும்போது, அவனும் புண்ணியத் தொண்டை செய்ய முனைவான்.

இப்படி மாறி, மாறி, மாறி....அவனும் அவன் பிள்ளைகளும்.....எனத் தொடரும்.

இப்படித்தான், பராக்கிரமிக்க மன்னன் சித்திரநாதன் என்பவன், ஒரு சமயம் தேவேந்திரனை வெற்றி கொண்டான்.இவன் ஆட்சியில், குடிமக்கள் ஒரு குறையுமின்றி செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தார்கள். அரண்மனை பொக்கிஷங்கள் குறைந்துபோன நிலை ஒருபோதும் இருந்ததில்லை. இப்படியான இன்பமான வாழ்வு நமக்கு வாய்த்ததை எண்ணி வியந்தான். இப்பிறவிக்குக் கிடைத்த இந்த நல்வினைப் பயன் எப்படிக் கிடைத்தது என ஆராய்ந்தான்.

இதற்குண்டான விளக்கம் தனக்குத் தெரியவராததால், தன் குலகுருவான வசிஷ்டரை அரண்மனைக்கு வரவழைத்து.....சுவாமி!,...யாம் விரும்பியபடியே எல்லாம் சந்தோஷமாக நடந்தேறுகின்றன. எந்தவித கவலையுமின்றி மக்களையும் சந்தோஷமாக வைத்திருக்கும் சூழ்நிலையே இருந்து வருகிறது, இது எங்ஙனம் என இக்கேள்வியைக் கேட்டான் மன்னன்.

அதற்கு வசிஷ்டர்....நீ முன் பிறவியில் செய்த நல்வினைப் பயனின் புண்ணியமே, இப்போது உணக்கு நல்வாழ்வு கிடைத்துள்ளது. யாம் செய்த புண்ணியம் எது எனத் தெரிந்து கொள்ள முடியுமா? சுவாமி!

சொல்கிறேன்!,.. முன்பு அவந்திப்பட்டிணத்தில், தர்மதொண்டன் என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவரின் பெயருக்குள் இருப்பதுபோல, தாண தர்ம தொண்டுகளை நிறையச் செய்து வந்தார். ஆனாலும், அங்குள்ள மக்களில் ஒரு ஏழையானவன் மிகவும் வறுமையில் உழன்று வாடினான்.

நாட்டில் மழையும் பெய்யவில்லை. தானியம் விளையவில்லை. கூலிக்குப் போக முடியவில்லை. அவனால் பஞ்சம் பட்டினியாக இருக்க நேர்ந்தது. வேறிடம் அகன்று வயிற்றுக்கு வழியேற்படுத்திக் கொள்ள, காட்டிற்குச் சென்று தஞ்சம் புகுந்தான்.

காட்டிலே என்ன கிடைக்கும்?, இவன் முன்னால் முயல் ஒன்று தரையை குழிபறித்து எதையோ உண்ணுவிட்டுச் சென்றதைப் பார்த்தான். முயல் பறித்த குழியில் மண்ணோடுமண்ணாக ஒரு வகைக் கிழங்கு விளைந்திருந்ததைக் கண்டு, இவனும் பல இடங்களில் குழி பறித்து கிழங்கை சேகரித்து அவனும் அவன் மனைவியும் உண்டு வந்தனர்.

நாளடைவில் காட்டிலும் அக்கிழங்குகள் கிடைக்க அரிதாகவே, காட்டிலே சிதறிக் கிடக்கும் சுள்ளிகளைப் பொறுக்கி கூப்பு சேர்த்துக் கொண்டு வந்து, ஊருக்குள் விற்று, அதில் கிடைக்கும் காசை வைத்து பசிப்பிணியைப் போக்கி வந்தான். ஒரு நாள் நகருக்குள் விற்கக் கொண்டு சென்ற விறகுக்கட்டு விற்கவில்லை. பல தெருவில் அலைந்து கேட்டும் விறகை யாரும் வாங்கிக் கொள்ளவில்லை.

அன்றைய தினம், பௌர்ணமி. கிரகண நேரம் அது. ஒரு வியாபாரியின் வீட்டில் ஹோமம் நடந்து கொண்டிருந்தது. இதை இந்த இருவரும் நின்று வேடிக்கை பார்த்தனர்.ஹோமம் செய்து கொண்டிருந்த வேதியர்கள் வியாபாரியிடம், குளிர் அதிகமாக உள்ளது. ஹோம இடத்தைச் சுற்றி தீத்தனுப்பு தீர ஏற்பாடு செய்யுங்கள் என்றனர். 

அங்கே நின்றுகொண்டிருந்த இவர்களை அணுகிய வியாபாரி, விறகினைக் கொண்டு இந்த இடங்களில் தீத்தனுப்பு ஏற்படுத்தக் கூறினர். அவர்களும் விறகுச் சுள்ளிகளை பல இடங்களில் பொதியவைத்து அனலை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

ஹோமம் முடிந்து வேதியர்கள் புறப்படுகையில், வேதியர்கள் ஒவ்வொருவருக்கும் நூறு களஞ்சி பொன் கொடுத்து அனுப்பினார் வியாபாரி. இதைக்கண்டு, ஏழையானவன் நினைத்தான்!. ஆகா!, இது கிரகண காலமாயிற்றே!, உத்தமமான இந்த நேரத்தில் வேதியர்களுக்குப் பொருள் கொடுப்பின், அது ஈசனுக்குக் கொடுப்பதுபோலவே!.

இன்று விறகு விற்காததால் நம்மிடம் காசும் இல்லையே?, என நினைத்துச் சோர்ந்து உட்கார்ந்தான். அவன் மனக்கவலையில், அவ்வேதியர்களுக்குப் பொருளை தானம் செய்வதாக, கற்பனையான நிழலை நினைந்து நினைந்து ஆனந்தப்பட்டான். அந்த ஏழைதான் நீ!, மனதாலே தானம் செய்த உன் செயலுக்கு அன்று புண்ணியம் பலன் உனக்கு வரவு வைக்கப்பட்டது.

இன்று பராக்கிரமிக்க சித்திரநாதனான நீ, அன்று செய்த புண்ணியம் பலனாக, இன்று அரச பீடத்தில் அமர்ந்து செழுமையாக இருக்கிறாய் என்றார், இப்பொழுது உன் முன்நிகழ்வை தெரிந்து கொண்டாயா? என்றார் வசிஷ்டர்.

சித்திரநாதனானவனுக்குக் கிடைத்த புண்ணியம் அவன் பட்ட கஷ்டத்திற்காக அல்ல?, தொண்டு செய்ய முடியாத நிலையிலும், தொண்டு செய்வதாக நிழலாகக் கொண்டானே!, அந்த எண்ணமே அவனுக்குப் புண்ணியத்தைத் தந்தது. நிழலான தொண்டுக்கே ஈசன் இவ்வளவு துணை செய்தாரென்றால்.... உண்மையில்  ஆலயத்திற்குத் தொண்டு செய்தால், அந்தப் புண்ணியம் நம் பிள்ளைகளுக்குப் போய்ச்சேரும். அதனால் ஆலயத் திருப்பணிகளுக்கு உபயம் அளியுங்கள்.

நீங்கள் அளிக்கும் உபயம், உங்கள் கர்ம வினைகளை ஒழிக்கும். புண்ணியம் சேமிப்பாகும். நீங்கள் அளிக்கும் உபயங்கள், திருக்கோபுரத்தில், செங்கற்களாய், காரைபூச்சுக்காளாய், வர்ணங்களாய் உங்கள் பெயரைக் கூறிக் கொண்டிருக்கும்.

ஏன், ஆலயத் தரிசனத்திற்கு செல்லும்போது திருக்கோபுரத்தைக் கடந்து போவோமே!, அப்போது ஒவ்வொருவர் மீதும், உங்கள் உபயம், கோபுர நிழலாய் பதியுமே. இதனால் அவர்களுடைய ஆசி உங்களுடைய விதியை நல்வழிக்கு இழுத்துச் செல்லும். இப்புண்ணியம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தனமாகத் திரும்பும்.

"மனம் நினைக்க மகேசன் அருளாவான்!"
"உபயம் ஒன்றளிக்க, உமாவும் அபயமாவாள்!"

புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே!


- கோவை கு.கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com