திருமலையில் நடைபெற்றுவரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரியின் போது பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 10-ம் தேதி முதல் இவ்விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அதன் 4-ம் நாளான சனிக்கிழமை காலை மலையப்ப சுவாமி கிருஷ்ணர் அலங்காரத்தில், ருக்மணி, சத்யபாமா தாயார்களுடன் கற்பக விருட்ச வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்தோடு மலையப்ப சுவாமியை கண்டு மகிழ்ந்தனர். அதன்பின் அவர் மாடவீதியில் பவனி வந்த களைப்பைப் போக்க அவருக்கு பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
முன்னதாக நேற்று மலையப்பசாமி யோகநரசிம்மர் அவதாரத்தில் சிம்ம வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார். அதனைத்தொடர்ந்து, மாலை முத்துப்பந்தல் வானத்தில் தன் நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.