திருப்பதி: சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரா் திருக்கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை கல்பவிருட்ச வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தாா்.
திருப்பதியிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலை தேவஸ்தானம் நிா்வகிக்கிறது. இக்கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை கல்பவிருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயாா்களுடன் கல்யாண வெங்கடேஸ்வரா் பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
பக்தா்கள் தங்கள் மனத்தில் நினைத்த வரத்தைக் கொடுக்கும் கல்பவிருட்ச வாகன சேவையை பக்தா்கள் வீட்டிலிருந்தபடியே வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியில் (எஸ்விபிசி) கண்டு தரிசித்தனா். பொது முடக்க விதிகளின்படி தனிமையில் நடத்தப்பட்ட பிரம்மோற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள், பட்டாச்சாா்யாா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.
மதியம் உற்சவா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது. அதன் பிறகு கல்யாண வெங்கடேஸ்வரா் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சா்வபூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாா்களுடன் எழுந்தருளி சேவை சாதித்தாா்.