திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நாளை(டிச.20) புதன்கிழமை மாலை சனிப்பெயர்ச்சி விழா வழிபாடு நடைபெறவுள்ளது.
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நாளை(டிச.20) புதன்கிழமை மாலை சனிப்பெயர்ச்சி விழா வழிபாடு நடைபெறவுள்ளது. பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு விழாவுக்கான தயார் நிலையை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. 

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனி சன்னதி கொண்டு ஸ்ரீ சனீஸ்வரபகவான் அபய முத்திரையுடன், அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி தற்போது மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு நாளை 20-ஆம்  தேதி மாலை 5.20 மணிக்கு பெயர்ச்சியாவதைக் குறிப்பிடும் வகையில் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

சனிப்பெயர்ச்சி விழாவில் தரிசனம் செய்ய நளன் தீர்த்தக் குளத்துக்குச் செல்லும் வழியில் உள்ள வரிசை வளாகத்திலிருந்து கட்டணமில்லாமல் தரிசனம் செய்ய செல்லும் வரிசை அமைப்பு உள்ளது. வளாகத்துக்கு வெளியே கூடுதலாகத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, கட்டண தரிசனமாக ரூ.300, ரூ.600, ரூ.1,000 என நிர்ணயம் செய்து திருநள்ளாறு பகுதியில் பல இடங்களில் டிக்கெட் வழங்கும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகவும்  கோயில்  நிர்வாக இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

பக்தர்கள் கோயிலின் தெற்கு வீதி, கீழவீதி வழியாகவும், தெற்கு வீதியிலிருந்து யானையடி மூலமாகவும் கட்டண வரிசை கோயிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டண வரிசை எங்கிருந்து தொடங்குகிறது என்பதை அறிய, ஆங்காங்கே கியூஆர் கோடு அட்டை பக்தர்கள் பார்வை படும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.

சனிப்பெயர்ச்சி நாளான 20-ஆம் தேதி 24 மணி நேரமும் சுவாமி தரிசனம் செய்ய  கோயில் நடை திறந்திருக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில்  புதுச்சேரியிலிருந்து 1,500 போலீஸôரும், காரைக்கால் போலீஸôர் மற்றும் தன்னார்வலர்கள் என ஏறக்குறைய 2 ஆயிரம் பேர் பணியமர்த்தப்படுகின்றனர். 

வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக 120 இடங்களில் தற்காலிக நடமாடும்  கழிப்பறைகளும், 150-க்கும் மேற்பட்ட நிரந்தர கழிப்பறை வளாகமும் உள்ளது. நளன் தீர்த்தக் குளத்தில் திரளான பக்தர்கள் நீராடுவார்கள் என்பதால், குளத்தின் மையப் பகுதிக்குச் செல்லாத வகையில் சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் படகு மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் பகுதியிலிருந்து  பக்தர்கள் திருநள்ளாறு  செல்ல போக்குவரத்துத்துறை சார்பில் இலவச  பேருந்துகள் 20-ஆம் தேதி காலை 6 மணி முதல் 21-ஆம் தேதி காலை  6 மணி வரை இயக்கப்படுகின்றன. 

திருநள்ளாறு கோயில் பகுதியிலும், வெளியிடங்களிலும் புதுச்சேரியிலிருந்து வந்த வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் குழுவினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மணிஷ் தலைமையில் புதுச்சேரியிலிருந்து வந்த போலீஸார் மற்றும் காரைக்கால் போலீஸாருக்கு விழாவின்போது போலீஸாரின் கடமைகள் குறித்து விளக்கப்பட்டது. கண்காணிப்புக் கேமராக்கள் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டு கோயில் வளாகம், காவல்நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைத்துக் கண்காணிக்கப்படுகிறது. 

வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு உணவு, ரொட்டி, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அன்னதானக் குழுவினர் செவ்வாய்க்கிழமை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலைத் தொடங்கியுள்ளனர்.

ஒட்டுமொத்தத்தில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் அச்சமின்றி திருநள்ளாறு வந்து தரிசனம் செய்யலாம். தேவையான பாதுகாப்பு மற்றும் விரைவான தரிசனத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com