
கும்பகோணம்: தமிழ் ஆண்டுப் பிறப்பையொட்டி சுவாமி மலையில் அமைந்துள்ள 60 தமிழ் வருட படிகட்டுகளுக்கு படி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும்.
இங்கு அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமையப்பட்ட மலைக்கோயிலாகும். இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிகட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகம்.
மேலும் இத்தலத்தில் தான் முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை, குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்பதும் வரலாறு. எனவே இத்தலத்தில் முருகப்பெருமான் சுவாமிநாதசுவாமியே நீ என்றும் போற்றப்படுகிறார்.
இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஒவ்வொரு தமிழ் வருட பிறப்பின் போதும் பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதுத, பிரஜோத்பத்தி என தொடங்கி குரோதன, அட்சய என முடிவுறும் 60 தமிழ் வருட படிக்கட்டுகளுக்கும் விசேஷ திருப்படிப்பூஜை செய்வது வழக்கம், அதுபோல இன்று 60 தமிழ் வருட வரிசையில் 37வது தமிழ் வருடமான விசுவாவசு வருடப்பிறப்பை முன்னிட்டு ஒவ்வொரு படிக்கட்டிலும் மஞ்சள், கும்குமம் இட்டு ஐந்து முக திருவிளக்கு ஏற்றி வெற்றிலை, தேங்காய், பூ, பழம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பஞ்சமுக கற்பூரதீபம் காட்டி மகா தீபாராதனை செய்யப்பட்டது.
இன்று விசுவாவசு தமிழ் வருடப்பிறப்பையொட்டி மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பெற்று, சண்முகா அர்ச்சனையும் நடைபெற்றது. தங்ககவசம், வைரவேலுடன் இராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.