குருப்பெயர்ச்சியால் நன்மையடையும் ராசிகள் எவை?

குருப்பெயர்ச்சி 2025ல் எந்தெந்த நன்மை பெறப்போகிறார்கள்..
குருப்பெயர்ச்சியால் நன்மையடையும் ராசிகள் எவை?
Published on
Updated on
2 min read

2025 ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 11ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மே 14ஆம் தேதியும் பெயர்ச்சியடைகின்றனர். குருப்பெயர்ச்சியால் நன்மையடையும் ராசிகள் எவையென்று தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.

நவகிரகங்களில் சுபக்கிரகங்களாக வர்ணிக்கப்படுவது குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய நான்கு கிரகங்கள் மட்டுமே. இதிலும் வளர்பிறைச் சந்திரன் சுபராகவும், தேய்பிறைச் சந்திரன் அசுபராகவும் எடுத்துக்கொள்ளப்படும். அதேபோல புதனும் சுபக்கிரகத்தோடு சேருகிற போது சுபத்தன்மை உடையவராகவும், அசுபரோடு சேருகிறபோது பாபத்தன்மை உடையவராகவும் கருதப்படும். ஆகவே முழு சுபகிரகங்களாகச் செயல்படுவது குருவும் சுக்கிரனும் மட்டும்தான். மற்ற ஐந்து கிரகங்களும் - சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது முழு பாப கிரகங்களாக ஜோதிட சாஸ்திரம் நிர்ணயித்திருக்கிறது.

இரண்டு முழு சுபகிரகங்களிலும் குருவை தேவகுரு என்றும், சுக்கிரனை அசுரகுரு என்றும் புராணங்கள் வர்ணிப்பதால், குரு ஒருவரையே முழு சுபக்கிரகம் எனவும், நல்லதைச் செய்ய வல்லவர் எனவும் பாராட்டலாம். அதனால்தான் குரு பார்க்கக் கோடி தோஷம் அகலும் என்றும்; கோடி நன்மை என்றும் சொல்லுவார்கள். அப்படிப்பட்ட குரு, வருடம் ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறுவார். "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று பொதுவாகச் சொல்லுவதுபோல, குருப்பெயர்ச்சியினால் விமோசனம் ஏற்படும் என்றும்; குரு பார்வையால் நன்மைகள் நடக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விஸ்வாவசு வருஷம் உத்தராயனம் வஸந்த ரிது சித்திரை மாதம் 28ம் தேதி - 11.05.2025 அன்றைய தினம் சுக்ல சதுர்த்தசியும் ஞாயிற்றுக்கிழமையும் ஸ்வாதி நக்ஷத்ரமும் வியதீபாத நாமயோகமும் வணிஜை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 18:29க்கு பகல் மணி 01.19க்கு சிம்ம லக்னத்தில் வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீகுரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார்.

குரு மாங்கல்ய காரகன் (பர்தா காரகன்- கணவன் காரகன்) என்றும்; சுக்கிரன் களஸ்திர காரகன் (மனைவி காரகன்) என்றும் சொல்லப்பட்டாலும், திருமணம் ஆகாத ஆண் - பெண் இருபாலருக்கும் திருமண யோகத்தைத் தருகிற கிரகம் குருபகவான்தான். அதனால்தான் வியாழ நோக்கம் இருக்கிறதா; குருபலம் வந்துவிட்டதா என்று ஜோதிடம் கேட்பார்கள். அதேபோல குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியத்தைக் கொடுக்கும் கிரகமும் குருதான்! இவர் புத்திர காரகன் என்பதோடு காசு பணம், செல்வத்தைக் கொடுக்கும் தனகாரகனும் குருதான்! வித்தை, ஞானம், புகழ், கீர்த்தி, பெருமை, செல்வாக்கு, பாண்டித்யம், மேன்மை, மேதாவிலாசம் இவற்றையெல்லாம் தருகிற கிரகமும் குருதான். அவருக்கு குரு, தேவகுரு, வியாழன், பிரகஸ்பதி, பொன்னன் உள்பட பல பெயர்கள் உண்டு.

குருவுக்கு உரியக் கோயில்கள்

திருச்செந்தூரும், கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடியும் சிறப்பாகக் கூறப்படுகிறது. மேலும் செங்கோட்டைப் புறநகரில் (அவுட்டர்) புளியறையிலும், காரைக்குடி, திருப்பத்தூர் அருகில் பட்டமங்கலத்திலும் தட்சிணாமூர்த்தியை வலம் வரும் அளவு தனிச்சன்னிதிகளாக விளங்குகின்றன.

இது தவிர மயிலாடுதுறையில் (சிதம்பரம் போகும் வீதியில்) வள்ளலார் கோவில் சிவாலயத்தில் மேதா தட்சிணாமூர்த்தியும், தஞ்சாவூர் அருகில் தென்குடித்திட்டையில் தனி குருவும், திருச்சி அருகில் பழூர் சிவாலயத்தில் நவகிரக தம்பதிகள் சகிதம் காட்சியளிக்க, குருவும் தமது பத்தினி தாராவுடன் அருள்புரிகிறார்.

கும்பகோணம் ஆடுதுறை அருகில் சூரியனார் கோயிலில் சூரியனுக்கு எதிரில் குரு எழுந்தருளியுள்ளார். மேற்கண்ட தலங்களிலும், சென்னைக்கு அருகில் திருவலிதாயம் (தற்போது பாடி என்று பெயர்), மயிலாடுதுறை பூந்தோட்டம் அருகில் திருவீழிமிழலை, சென்னை - வேலூர் ரோட்டில் வாலாஜா பேட்டையிலிருந்து சோளிங்கர் போகும் சாலையில் தன்வந்திரி ஆரோக்கிய பீடம், புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி பாதையில் ஆலங்குடி உள்ளிட்ட தலங்களிலும் தட்சிணாமூர்த்திக்குக் குருப்பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தப்படுகிறது. மதுரை அருகில் குருவித் துறையிலும் (குரு வீற்றிருந்த துறை- வைகைக் கரையில்) ஹோமம், பூஜை, அபிஷேகம் செய்யப்படுகிறது.

குரு அவரவர் ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் வரும்போது நற்பலனும்; 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் வரும்போது துர்ப்பலனும்; ஜென்மம், 4, 10-ஆம் இடங்களில் வரும்போது சமபலனும் நடக்கும். இது பொதுவிதிதான். மாறியும் பலன் செய்யலாம். சந்திரா ராசிக்கு கூறப்படுவதுபோல குருபெயர்ச்சிப் பலன் அவரவர் லக்னத்துக்கும் பொருந்தும். அதேபோல பிறக்கும் காலத்தில் ஜனன ஜாதகத்தில் குரு இருந்த ராசிக்கு 2, 5, 7, 9, 11-ல் வரும்போது நற்பலனும்; 3, 6, 8, 12-ல் வரும்போது துர்ப்பலனும் நடக்கும்.

குருப்பெயர்ச்சியால் ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்

நன்மை பெறும் ராசிகள்: மிதுனம் - துலாம் - தனுசு - கும்பம்

நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: ரிஷபம் - சிம்மம் - கன்னி - மீனம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மேஷம் - கடகம் - விருச்சிகம் - மகரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com