கடந்த வாரத் தலைப்பு நீர்ப்பரப்பில் ஒரு மீன்! வாசகர் கவிதைகள்!

நீர் தான் உயிர்; நிலம் கல்லறை என்று மீனுக்குத் தெரியும் தெரியாதது நீரும் கல்லறை என்று
கடந்த வாரத் தலைப்பு நீர்ப்பரப்பில் ஒரு மீன்! வாசகர் கவிதைகள்!

நீர்ப்பரப்பில்  ஒரு மீன்

நீர் தான் உயிர்; நிலம் கல்லறை
என்று மீனுக்குத் தெரியும்
தெரியாதது நீரு ம்கல்லறை என்று

நீந்திச் செல்லும் நீர்
கனவின் திரவ வடிவம்;
கனவின் சுழல்களில்
நிஜத்தின் பாம்புகளும்
பின்தொடரும்

கரையில் காத்துக்
கொண்டிருக்கின்றன
தூண்டில்கள்
நீரில்காத்துக்
கொண்டிருக்கின்றன
பசி கொண்ட
சிவப்புப் பற்கள் முதலைகள்

செதில்களின் ஊடாகக்
காற்று உயிர்ப்பின்
கீதம்வாசிக்கும்
நீச்சல் சுகமானது
நீச்சல் விதியானது

மெளனமாய்ச் சொட்டும்
கண்ணீருக்குக்
நீரே கல்லறை

நீச்சலும் எதிர்நீச்சலும்
நிம்மதி குலைத்தாலும்
நீருள்ள வரை
நீச்சல் தொடரும்
அநித்தியம் இங்கே
நித்தியமானது எனினும்

- வேலாயுதம் மாரியப்பன்

** 

தன்நிகர் துணைதேடியே
  தித்திக்கும் கனவோடு
நீங்காத நினைவோடு
  அங்குமிங்கும் அலைமோதும்

மங்கையின் கன்னிமனம்....
  அத்தானின் அன்பைப்பெற
தத்தித்தாவி குதித்தாடும்
  தத்தை நெஞ்சம்....

நீர்ப்பரப்பில் நீந்தும்
ஒற்றை மீன்போல
காதல்கடலில் தத்தளிக்கும்
தாரகையின் கயல்விழிகள்...

- கவிஞர். க. இராமலெட்சுமி, தென்காசி

**
நீர்ப்பரப்பில். ஒருமீன்
ஊருக்குவெளியேசிவன்கோயில்
வேரறுக்கும் பாவம்வந்தனைசெய்தாலென
குளத்தருகேகை,கால்,முகம்கழுவ
தளத்தருகேசென்றனம்யாம்இன்று.

நீர்ப்பரப்பில்ஒருமீன்,பெருமீன்
பார்பாரெனகவர்ந்து இழுத்து
உயரத்துள்ளித் குதித்ததுஅழகாய்
வயிரம்பாய்ந்ததன்உடல்வளைத்து.

கைநிறையப்பொரிநீரில்இட
மைநிறத்து கருமீன் அதுவும்
வாய்திறந்துஉணவுஉண்ண
மாய்மாலம்பலவும்செய்ததுவே .

பொரிமிதக்கநீரில்,சிறுமீன்களும்
சாரி,சாரியாய்சுற்றிநீந்திவர
வாரிஅள்ளிஉண்ணமுயன்றதம்மா
நீர்ப்பரப்பில்யாம்கண்டமீனதுவும் .

- திருமதி ராணி பாலகிருஷ்ணன்

**
நீப்பரப்பில்  வாழும் 
உயிரினம் மீன்  -   அதில் 
குளம்,  குட்டை, என்பதுடன் 
பாட்டில், தொட்டில்   என 
மனம் விரும்பும்  இடத்தில் 
வளரும்  ஒரு மீன்.......
அது சொல்லும் வாழ்க்கைப்படம் 
அறியாயோ மானுடனே!
நீர் வளம் குன்றினால் 
மீன் வளமும் குன்றுமே!
இயற்கையினை நேசித்து 
செயற்கையினை பின் தாலி 
காப்போம் நீர் வளத்தினை!
நீர் இருந்தால் மீன் உண்டு 
இதைப் படைத்த இறைவன் 
நமக்கு சொல்லும் பாடம்!
"நீர்ப்பரப்பில் ஒரு மீன்"  போல 
உற்சாகத்துடன் சுழன்று சுழன்று 
வாழ்ந்தால் வெற்றி நிச்சயம்" என்பதுதானே?

**
மீனினை க்கண்டு நாரையின் 
கண் பிதுங்கியதோ வதனைக் கண்டிட்டு 
கோரையினிடையில் ஒதுங்கியதோ 
உயிருக்கு ஆபத்தென வெதும்பியதோ 
நீர்ப்பரப்பில் ஒரு மீன் தனிமையில் 
கடவுளே யென்னை காப்பாற்றென 
தண்ணீரில் கண்ணீர் ததும்பியதே 
எவர் கண்ணேனும் கலங்கியதோ 

காதலைத் தெரிந்தவள் காத்து நிற்பாள்
மீனுக்கு ஏங்கும் நாரையைப் போல் 
காதலை அறியாதாள் பூத்து நிற்பாள்
தேவையற்ற ஒன்று என்று இவற்றுள் 
ஒருத்தி கவலையில் ஏங்குவாள்
ஒருத்தி கவலையின்றி தூங்குவாள்

இங்கே மீன்விழி கொண்ட பெண்மான் 
மலர்விழிகளிலும் அவ்வச்சம் தீராது 
அரங்கேறும் அவல நிலைகள் தானே 
வெட்டவெட்ட துளிர்விடும் முருங்கை 
மரத்தைப் போன்றன்றோ துளிர்விடும் 
வண்ணமாகவே இருக்கின்றது முடிவு 
ஒன்று உண்டாகுமா துடிக்கின்றது 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி, கண்டம்பாக்கத்தான்

**
ஆகாய வெளியோ
அம்மாவாசை இரவோ
அதற்கு தெரியாது.
வெண்ணிலவின் ஒளியோ
வண்ணவில்லின் நிறங்களோ
அதன் மேல் பட வாய்ப்பில்லை
அலைகளின் ஆர்ப்பரிப்பும்
வலைகளின் சலசலப்பும்
கேட்காது .
பசியுடன் வட்டமிடும்
பருந்தைப் பற்றிய
பயமும் அதற்கு இல்லை.
சுவைக்க உணவு உண்டு !
சுவாசிக்க பிராணவாயு உண்டு !
சுற்றி நின்று கைதட்டும்
கூட்ட மும்   அதற்கு உண்டு ! 
அந்த  இல்லத்தின்
செல்வத்தைப்பெருக்க
கண்ணாடிக் குடுவைக்குள்
விடப்பட்ட
நீர்ப்பரப்பில் 
நீந்திக்    கொண்டிருக்கும் வண்ண மீனாம்
வாஸ்து மீன் தான் அது.!

- ஜெயா வெங்கட், கோவை

**
முதலையாக இருந்திருந்தால் நீர் நிலம் இரண்டிலும் வாழலாம்
மீனாக இருப்பதால் நீரில் மட்டுமே வாழலாம்!

மீனவனின் வலையில் சிக்கியது மீன்
மீனவன் படகில் வைத்திருந்தான் மீனை!

சிங்கள் இராணுவம் வந்து சிறை பிடித்தது
சோகத்துடன் இருந்த மீனும் இலங்கை சென்றது!

நேரம் கடந்ததால் மீனின் உயிர் பிரிந்தது
நேரத்தே தமிழகம் வந்திருந்தால் குழம்பாயிருக்கும்!

யாருக்கும் பயன்படாமல் காய்ந்து கருவாடானது
யாராவது பேசி படகு மீட்பார்கள் என்றிருந்தான்!

கேள்வி கேட்க நாதியே இல்லை இங்கு
கண்டபடி சுடுகிறான் வலையை கிழிக்கிறான்!

படகையும் பறிக்கிறான் மீனையும் சிதைக்கிறான்
பாதிக்கப்பட்ட மீனவனுக்கு நிவாரணம் கிட்டவில்லை!

வயிற்றுப் பிழைப்பிற்காக கடலுக்குச் சென்ற மீனவனின்
வயிற்றில் அடிப்பதை வாடிக்கையாகச் செய்கிறான்!

உலகமகா ரவுடியாக கடலில் வலம் வருகிறான்
ஒருவருமே அவனை ஏன் என்று கேட்பதில்லை!

மீன் கருவாடாவது போலவே மீனவனும் கருவாடாகின்றான்
மீனவனின் பாடு மீனை விட கொடுமையானது!

காக்கை குருவியென சுட்டுத் தள்ளுகிறான்
காட்டுமிராண்டியை விட மோசமாக நடந்து கொள்கிறான்!

மனசாட்சி இல்லாத மிருகமாக சிங்களப்படை
மனிதாபிமானமற்ற முறையில் தினமும் தாக்குகின்றான்!

மீனவனின் வாழ்வில் விடியல் என்றோ தெரியவில்லை
மீனவன் தினமும் செத்து செத்து பிழைக்கின்றான்!

- கவிஞர் இரா .இரவி

**
வான்பரப்பில்  கணக்கற்ற  விண்மீன்கள்  நீந்த,
    முகிலழுக்கைத்  தின்றுதூய்மை  ஆக்குவது  மில்லை; 
மான்போன்ற  விலங்கினங்கள் வனப்பரப்பில்  வாழ்ந்தும்,
    மான்சிங்கம்  ஒன்றிணைந்து  வாழ்வதுவு மில்லை;
ஊன்பரப்பில்  மாந்தரென  வாழ்கின்ற  மாந்தர், 
   ஊனமனம்  இல்லாமல் மண்பரப்பி(ல்) இல்லை; 
மீன்ஒன்றே  இருந்தாலும் நீர்ப்பரப்பி(ல்) அழுக்கை, 
    மகிழ்வுடனே தின்றுதூய்மை காக்குமென்று ணர்வீர்! 

நீர்ப்பரப்பில் அழுக்கினையும் மீன்தின்று தூய்மை 
    நன்னீராய் மாற்றுகின்ற சீர்குணம்போல், மண்ணின் 
சீர்ப்பரப்பில்  வாழ்கின்றோர் மனத்தினிலே  அழுக்கை 
    சேர்க்காமல் நீக்கியேதான் நன்னிலமாய் மாற்ற 
நேர்மைமிகு மெய்பரப்பில் தூய்மைகாக்க வேண்டும்; 
     நேர்மறையாய் எண்ணங்கள், செயற்பாடு வேண்டும்; 
நீர்ப்பரப்பில் வாழ்ஒருமீன், நிலப்பரப்பில் வாழ 
     நினைத்தல்போல், தீயமாந்தர் நினைப்பிருந்தால்  சாவே! 

மலைபரப்பில் சுனைநீரும் மூலிகையு மிருக்கும்; 
    வேர்ப்பரப்பில் மரங்களுந்தாம் நிமிர்ந்துநிற்கும்; சீரும் 
அலைபரப்பில் கடற்கரையும் மகிழ்ந்திருக்கும்; ஓடும் 
     ஆற்றினது பரப்பினிலே புதுப்புனலும் துள்ளும்;
கலைபரப்பில் தமிழ்க்கலைகள் புகழோங்கி நிற்கும்;
     சிலைபரப்பில் சிற்பியவர் திறன்மிளிர்ந்து  மின்னும்;
நிலப்பரப்பில் மாந்தயினம் அறமின்றேல் வீழ்வர்;
     நீர்ப்பரப்பில் ஒருமீன்தான் எனினுமது  வாழும்!

-"நெருப்பலைப் பாவலர்,"இராம இளங்கோவன், பெங்களூர்

**
வங்க கடலில் - அன்று
வந்த பெரும் புயலில்
வலையில் அகப்பட்ட மீனாய்
நாங்களே சிக்கிக் கொண்டோம்...

உதவி உதவி' என
உரைக்க உரைத்தோம்...
தவித்தோம்.. தத்தளித்தோம்...

வளர்ந்த தொழில்நுட்பம் - எங்களிடத்தே
விரைந்தே வாராதோ..? மீண்டும்
வாழ்க்கை தொடராதே..? - என்றே
வான் நோக்கி கிடந்தோம்.....!

எங்கள் யாக்கையே படகானது
எங்கள் கைகளே துடுப்பானது
நிச்சயம் கை கொடுப்பாரென்று
நீச்சலையே தொடர்ந்தோம்...

நேரமாக..நேரமாக - உடலோடு
மனம் சோா்ந்தது..கண்ணீர்வந்தது -
எங்களின் நிலைக்காக அல்ல
எங்களையே நம்பி இருக்கும்
எங்களின் குடும்பத்தின் நிலைக்காக...?
என்னாகுமோ..? ஏதாகுமோ..?என்றெண்ணி..

இறுதியில் எங்களை நோக்கி
ஒரு கயிறும் வந்துவிழுந்தது
பிடித்து ஏறிச்சென்றப் பிறகும் -
'நீர்ப்பரப்பில் ஒரு மீனாக'
எங்கள் உடல்மட்டும் கிடந்தது...
கயிற்றினை உற்று நோக்கினோம்
அது காலதேவனின் பாசக்கயிறு....!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி

**
தண்ணியிலே  மீனுண்டு 
தரையிலே  மான் உண்டு
என்ற  பாடல் வரிகளில் 
மீனின் சுவாசம் நீர்ப்பரப்பில்தான்
என்று உணர்ந்து 
கடவுள் படைத்த  படைப்புகளில் 
மீனை.....................ரசிப்போம்!
வண்ண வண்ண  மீன்களை 
எண்ணம் போல நீர்நிறைந்த 
தொட்டிகளில்  வளர்ப்பதில் 
எத்துணை  இன்பம் வைத்தாய் 
அத்துணையும்  எனக்குள்  
வைத்தாய்  இறைவா!
உறக்கம் அறியா நீர்ப்பரப்பில் 
கிறக்கமின்றி  சுற்றி சுற்றி  வரும் 
மறக்க முடியா  சுறுசுறுப்பை 
கற்போம்  மீன்களிடம்.................
அதுதான்  வாழ்வின்  வெற்றிப்படி!

- உஷாமுத்துராமன், மதுரை

**
சிறுமியர் விளையாடும்
ஓட்டாஞ்சில்லை குளத்து நீரில்
ஓரக்கண்ணால் எறிந்தபோது 
துள்ளி துள்ளி ஓடுவதுபோல் 
நீர்பரப்பில் துள்ளி துள்ளி 
நீந்தி சிலிர்க்கும் ஒரு மீன் !

அமைதியான நீர்பரப்பில்
ஆதவன் கதிர் ஒளியில்
பல வண்ணங்களில் 
நீந்தி விளையாடும் 
ஒளிரும் மீன்குஞ்சுகள் !

புரண்டு ஓடும் நதியில் 
ஆனந்தமாக குளிக்கும்போது
நம் பாதங்களை மட்டுமல்ல
நம் உள்ளங்களையும் 
முத்தமிடும் மீன்கள் !

கதிரவனின் ஒளிக்கதிர்கள்
பறக்கும் பறவை ஒலிகள்
பதுங்கும் நண்டுகள் 
மணக்கும் தாமரை மலர்கள் 
கண்ணாடித் தொட்டி நீரில்
தேடித் தேடி காணாமல் 
கவலையுடன் நீந்தும் மீன்கள் ! 

- பொன்விலங்கு பூ.சுப்ரமணியன், வன்னியம்பட்டி

**
இறைவனது படைப்பில்
நிலையாமை நிலை நிதர்சனம்.
அறிவு ஒன்றோ  ஆறாகவேயிருப்பினும் 
வாழ்வும் முடிவும் யாரறிவார்.
நல்லிரவில் நல்லதொரு 
மழை நின்ற நேரம்
நல்லதும் சாரையும் பிணைந்து
சென்றிடலாம், ஏனோ, தன் மன
மகிழ்ச்சி வந்திடும் வேளை, 
தானே உணவாகிடும் தவளை.
மக்களாட்சி, மக்கள் தேவைக்கென
வந்திடுவோர், கை குவித்து கும்பிடுவோர்,  
வீட்டு வாசல் தன்னில் பல் இளித்து 
பசப்பு வார்த்தை பல பேசிட.., 
கேட்போர்,கேட்டோர், சேர்ந்தே, 
தன் வாக்கினை தானே அளிப்போர், 
தம் வாழ்வை இப்பாரினில் தானே இழப்பர்.
நீருக்குள் இருக்கும் சுகமாகவே மீன்,
கரையில் கொக்கு நாரையுடன் தொலைவில் 
உள்ள பருந்தும் பறந்தே வந்திடும்
தானாகவே வந்து தன்னுயிரை 
உணவாகவே தாரை வார்க்குமாம் 
நீர்ப்பரப்பில் ஒரு மீன்.

- இரா.அண்ணாமலை, திருவண்ணாமலை.

**
சுற்றி சுற்றி வருது  அந்த ஒரு மீன் 
மீன் தொட்டியில் தனியாக !
தன் துணை மீனையும் இன மீன்களையும் 
காணாமல் தவிக்குது இன்று !
நேற்று வரை ஒரு பெரிய தொட்டியில் 
அந்த மீன் ஒரு கடையில் !
வாஸ்து மீன் அந்தஸ்த்தில் அந்த மீன் 
இன்று ஒரு சிறிய தொட்டியில் ,ஒரு 
வீட்டின் மூலையில் !
வாஸ்து மீன் வந்த மகிழ்ச்சியில் அந்த 
வீடு ! தங்கள் அந்தஸ்து உயரும் என்னும் 
நம்பிக்கையில் வீட்டில் எல்லோரும் ! 
தான் ஒரு வாஸ்து மீன் என்று புரியாமல் 
தொட்டியில் தனியாக சுற்றி சுற்றி மற்ற 
மீன்களைத் தேடுது அந்த ஒரு மீன் ! 
என்ன அய்யா உங்கள் வாஸ்து மோகம் ?
மீன் தொட்டியில் தனியாய் தவிக்கும் ஒரு மீனுக்கும் 
நீர்ப் பரப்பு விடுத்து  நிலத்து  மண்ணில் துள்ளித் 
துடிக்கும் ஒரு மீனுக்கும் இல்லை பெரிய வித்தியாசம் !
வாஸ்துவின் பெயரால் அவஸ்தை மீனுக்கு ! இது 
புரிய வேண்டாமா நமக்கு ? தொட்டியில் மீனை நம் 
வீட்டில் சிறை வைக்க உரிமை ஏது  நமக்கு ? விட்டு 
விடுவோம் மீனை அதன் வீட்டில்! பெரிய நீர்ப்பரப்பில் !

- K.நடராஜன் 

**

ஆர்ப்பரிக்கும் அலைப் பரப்பில் நாரைகளும் மொய்திருக்க 
பார்த்திருந்து காத்திருந்த பருந்து பல சுற்றிவர
தேர்ந்ததொரு மீனவனும் தூண்டில் கொண்டு நின்றிருக்க
சோர்வுமின்றி  மீனுமொன்று  களித்தல் அங்கே காண்பீரே!

ஊர்முழுதும் தீமைபல ஓங்கி நின்றபோதும் என்ன?
யார்வரினும் எவர்வரினும் ஊக்கமது போதும் - என்றும்
நேர்மையுடன் நீதியதை நெஞ்சில் தினம் நீயும் கொள்க
நீர்ப்பரப்பு மீனதுபோல் உவகையுடன் வாழ்வை வெல்க!

- கு. இராமகிருஷ்ணன், வடக்கு அயர்லாந்து.

**
நீரேயில்லாதஇடத்தில்
உயிர்கள்இருந்துஎன்னபயன்????
ஆளேயில்லாதஊரில்
ஆலைகள்கட்டிஎன்னபலன்???
மொழிகள்தெரியாத
ஊரில்கண்ணிருந்தும்
என்னபயன்???
ஒரேயிடத்தில்நின்றுகொண்டு
இருப்பிடம்வரவில்லை
என்றுசொல்லிஎன்னபலன்????
இங்கு  ;படிப்பிலேசாதியில்லை ___ ஆனால்
படிப்பதற்குஅதில்;
முன்னுரிமைகொடுப்பதற்குசாதியுண்டு
எங்கும்போட்டி
எங்கேயும்பொறாமை
உழைப்புஅதிகம்
ஊதியம்குறைவு
நல்லவழிகாட்டி 
நல்லதலைவர்இன்றுஇல்லை
என்னசெய்வது?
நீருக்கடியில்மீனாக
அழுகின்றேன்
யாரேனும்நான்
அழுவதைதெரிந்துகொள்ளவருவாரா??
என்றுஏங்கிதவிக்கும்
நீர்ப்பரப்பில்ஒருமீனாகத்திரிகின்றேன்நானும்….

- களக்காடுவ.மாரிசுப்பிரமணியன்

**

நீருலகம் விட்டு நிலவுலகம் காண விரும்பிய மீன்
ஈருலகும் தனக்குப் பாதுகாப்பென எண்ணியதே
ஊருலகு அறியா மீனை அனுபவ மீன்கள் விளிக்க
சேருலகின் கட்டுப்பாடு பிடிக்காமல் மறுத்து நின்றதே

வெள்ளி மினுக்கலில் முகம் திருப்பிய மீனவனும்
அள்ளிச் செல்லலாம் இன்று மீன்களை என எண்ணி
துள்ளும் மீனைப் பார்த்தே நடைபயின்று வந்தானே
சுள்ளி பொறுக்குவது போல் அந்த மீனைப் பிடித்தானே

இரும்புப் பிடியில் சிக்கிய மீன் துள்ளித் தப்ப நினைத்து
திரும்பி வாலால் அடித்திட அவனும் அதைத் தாக்கினானே
விரும்பிய வாழ்வில் இத்தனைச் சிக்கல்களா வருந்தியே
துரும்பான தன்னால் ஆவதொன்றில்லை என நினைத்ததே

அறிவுரை சொல்லிய சமூகத்தை புறந்தள்ளியதால்தானே
கறியாகப் போகிறேன் இவ்வுலகு வாழ்வு நீத்திடுவேனே
கொறித்துப் பல்லால் காயமுண்டாக்க கை நழுவியதே
பறித்த இலையாகத் தண்ணீரில் பாய்ந்த உள்சென்றதே மீன்.

மன்னிப்பீர் அன்பு மக்களே புற உலகு மோசம் தான்
அன்புலகம் இங்கிருக்க நான் சென்றது தவறுதான் என
தன்நிலைகூறி அழுதிட தேற்றின சோதர மீன்களுமே
வன்கொடுமையற்ற தன்னுலகு சென்று அமைதியாயினவே

நாவில் நீர் ஊறும் நீர்ப்பரப்பில் மீன் கண்டால் மனிதர்க்கு
ஈவின்றி இரக்கமின்றி பிடித்திடுவர் நன்றாய் சுவைத்திடுவரே
சாவின்றி சரித்திரம் படைக்க முடியாதுதான் என்றாலும்
பாவி உயிரை சில காலமேனும் பாதுகாக்க வேண்டாமோ

நீர்ப்பரப்பு மீனின் ஞானோதயம் வழிநடத்தும் பெரியோர்
ஊர்ப்பரப்பில் சொல்லும் அனுபவங்களின் அடிப்படையே
ஆர்ப்பரிப்பில் துள்ளிக் குதித்து துன்பச் சேற்றில் விழாமல்
நேர்ப்பரப்பில் நிலையாக நின்று வாழ்வு வாழ்ந்திடணும்.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

நீர்ப்பரப்பில்உள்ளவொருமீனைக்கொத்த
    நின்றிருக்கும்கொக்குகளைப்போலவின்றோ
ஊர்த்தெருவில்நடந்துவரும்பெண்ணைக்கொத்த
    உள்ளார்கள்கண்விழித்துக்கயவரிங்கே !
வேர்போன்றதமிழ்ப்பண்புஒழுக்கமெல்லாம்
    வேற்றுமொழிக்கல்வியினால்போனதாலே
சீர்போலப்பெண்களினைமதித்ததெல்லாம்
    சீர்கெட்டுப்போனதுவேநாட்டிலின்று !

துள்ளியெந்தஅச்சமின்றிநீர்ப்பரப்பில்
    துடிப்புடனேநீந்துமொருமீனைப்போல
நள்ளிரவில்ஒருபெண்தான்தனியாய்வீதி
    நடந்துவரத்திகழ்வதுவேநல்லநாடு !
கொள்ளிப்போல்தூண்டிலினைப்போட்டுமுள்ளில்
    கொத்திமீனைத்துடிதுடிக்கப்பிடித்தல்போன்று
கள்ளமனக்காமுகர்கள்தெருவிலின்று
    கற்பழித்துவீசுகின்றநாடாயிற்று !

கடல்நீரில்குளநீரில்ஏரிநீரில்
    கயல்களெல்லாம்துள்ளிவிளையாடல்போன்று
மடவார்கள்சுதந்திரமாய்நடக்கவேண்டும்
    மாண்புடனேஅவர்களினைநடத்தவேண்டும் !
குடம்போன்றதொட்டிக்குள்வளர்த்தல்போன்று
    குலவிளக்கேஎனவீட்டுள்அடைத்திடாமல்
முடமின்றிப்பல்துறையில்பறக்கவிட்டால்
    முன்னேறும்வீட்டோடுநாடும்நன்றாய் !

- பாவலர் கருமலைத் தமிழாழன்

**
துன்பமின்றி இன்பத்தில் 
துள்ளி விளையாடி 
ஆய்ந்தோய்ந்து குளத்தில்
அல்லும் பகலும் 
அல்லி மலர் மீதினில்... 

சோடிவெள்ளி மீன்களும் 
இன்னல் ஏதுவுமின்றி 
பள்ளிக் கொண்டு நித்தம்
இச்சை இன்பம் களித்து

பச்சைப் பாசிகளில்
இரைத்தேடி இனிதாய்
இயற்கையும் செழிக்க
வாழ்ந்து  மகிழ்ந்த அந்த 
வசந்த காலம் இன்று 
வறண்ட காலம் ஆனதால்...

வெந்தழல் நீரில் 
வெந்து சாகும் மீனும்
வேறுவழி இல்லாமல் 
வெப்பம் தணிந்திட 
குளிர் காற்று வாங்க 
நீர்ப்பரப்பின் மீதினிலே
ஓடி வந்ததோ..?

- கவிஞர் பி.மதியழகன்

**
நிலத்தினிலே பிறக்கின்ற உயிர்க ளெல்லாம்
……….நித்தமுமே காத்திருக்கும் உணவுக் காக.!
இலக்காக பல்லுயிர்கள் ஒன்றுக் கொன்று
………இயற்கையாக உணவாகும் நியதி உண்டு.!
பலவகையாய் உணவுகளில் பிடித்த தாக
………பல்லுயிர்கள் சுவைப்பதுமே மீன்கள் தானே.!
நலமுடனே நீண்டவாயுள் அதற்கு இல்லை
………நீர்ப்பரப்பின் மேல்வந்தால் வாழ்வு மில்லை.!
.
பாவமான சன்மங்கள் பலதில் “மீன்கள்”
………. பலருக்கும் உணவாகும் பாவ ஜீவி.!
ஏவப்பட் டதோட்டாவும் உயிர்கு டிக்க
……….ஏறாள மீன்களுமே வலையில் சிக்கும்.!
சாவதற்கே பிறந்திருக்கும் சாபச் சன்மம்
……….சாப்பாட்டில் ருசிதருமே நாவிற் கின்பம்.!
காவலுக்கு யாருமில்லை உயிர் காக்க
……….கடவுளுமே படைத்தாரே கணக்கி லாது.!
.
நீர்ப்பரப்பில் மிதந்துவரு மொரு மீனை
……….நீள்பார்வைக் காட்சியிலே கழுகு கண்டு.!
போர்வேகம் கொண்டதொரு திறமை யாலே
……….பொத்தென்று கொத்திவிடும் அலகி னாலே.!
கார்மேகம் கலைவதுபோல் கலைந் தாலும்
……….கத்திபோன்ற சுறாக்களுக்கும் உண வாகும்.!
ஆர்கதியை என்னவென்று யாரறி வாரோ
……….ஆபத்தே வாழ்க்கையாகும் அவலம் காண்பீர்.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**
இயற்கை நிலையில் இப்போதெல்லாம் அரிது
  என்றாலும் மீனின் பெருமை உணர்கின்றேன்
செயற்கை முறையில் மீனை ரசிக்க ஆசை
  என் நண்பனின் உதவி கோரினேன் அவனும்
முயற்சி செய்து முன்மொழிந்தான் சில அதன்
  மூலம் மீனை ரசிக்க அதுவும் தினமும்
முயற்சிசெய்கிறென் முடிந்தால் செய்யுங்கள்
   முயன்றேன் மீன் பற்றி அறிந்தேன் விரைந்தேன்
துவார்ப் கோரா:-இது எதிலும் வளர்க்கலாமென்றனர்
    அறை உஷ்ணமே போதும் வண்ணமுடையது

பாசி,பூச்சி சாபிட்டே வாழும் இதன் அற்புதம்
 நம்போல் வெளிக்காற்றை சுவாசிக்கம் நீருக்குள்
துவார்ப் கோரா 2 என்பதும் செமக்கவர்ச்சி அழகாய்!
  இன்னும் ஒரு வகை ரயின்போ ஸார்க்
இதுவும் அழகுதான் எல்லா வண்ணங்களிலும்
  புரத உணவு போதும் எங்கிறார். இதில்
தொட்டியை நாம் சுத்தம் செய்ய வேண்டு இல்லையேல்
  நாறும் யாரும் ரசியார் வெட்கமாகிவிடும்
கப்பீஸ் இது ஒரு வகை, 4சிசி பெரியது
 கவர்சிகரமானது ! வேண்டும் அதுவே சுத்தம் செய்யும்      
தங்க மீன் இது பார்ப்பவர் ரசிப்பர் பளபள மீன்
  எவ்வளவு போட்டாலும் சாப்பிட்டுவிடும்
யார் வேணுமானாலும் வளர்க்கலாம் இதை!
 தொட்டியில் வளர்க்கலாம் டேங்கில் எதிலும்1
ஐந்து வகை மீன்களை ரசித்தேன், வாங்கி
  வளர்கக துணிந்தேன் எதை? முடிவு செய்யவில்லை!

- கவிஞர்   ஜி. சூடாமணி, இராஜபாளையம்

**

மீன் களில் எத்தனையோ வகை யுண்டு  அவையெல்லாம்
 கண்முன்னே காட்சியாய் தெரிகிறது கலை இங்கே!
மீன் அவதரமாய் பெருமாள் மனுவின் கண்ணுக்குப்பட்டார்
 வேதத்தை காக்க எடுத்தது மீனின் தோற்றம் விளம்புவார்
மீனினை கொடியில் பொரித்தான்  பாண்டியன் அன்று
  மீனை கண்ணாய் பெற்றவள் பராசக்தி அதனால் மீனாட்சி!
மீனை திருமலாய் ! அவதரமாய் துதிக்கின்றார் வைணவர்கள்
  இந்நாளில் எழிலுக்காய் வீட்டில் வளர்க்கின்றார்
தொட்டிக்கு மேற்புறம் வந்து நம்மைப் போல் சுவசிக்கும்
  மீன் ஒரு வகை அதுதான் தூவார்பு ஒன்று, இரண்டு

தொட்டிக்கு அடியிலேயே தங்கி வாழும் ஒரு வகை
   ஆம் அது வானவில் சார்க் ! அழகாய் தோன்றுகிறது
தொட்டிக்குள் வாழும் கபீஸ் வகைகூட சிறப்பானது
   எல்லாவற்றுக்கும் மேலாக எல்லார்க்கும் பிடித்தது
தொட்டியில் வளரும் தங்கமீன் ஒரு வகைதான்
   மனிதனைபோன்றே நிறைய உண்ணும் கழியும்
தொட்டி துப்புறவு அவசியம் இல்லையேல் கழிவுகூடும்
   தோரணையாக மீன் வளர்க்க ஆரம்பிதேன் மகிழ்ச்சி!

- அரங்க.கோவிந்தராஜன், இராஜபாளையம்

**

மெல்லப் பேசத் துவங்கினோம்.

குளம் தாண்டி வாய்க்கால் வழியோடி
ஓடைகளும் குதித்தோடி ஆறுகள் நீந்தி
கடல் பார்க்கும் கனவுண்டோ ?

இல்லாத இமை மூடி
கண் திறந்தே உறங்குகையில்
கடல் கனவும் வருவதுண்டு.
மேலே துள்ளிக்குதித்து தலைதூக்கி
கடல் காணும் தூரத்தை
நானும் தான் அளப்பதுண்டு.

இன்னும்
குளத்தின் கரையே தாண்டவில்லை
எவ்வளவு நாள் ஆகும்
கடல்தூரம் வசப்படுமா ?

தெரியும் தெரியும்
ஒரு பெருமழை போதும்
கண்மாயும் கரை புரண்டால்
நீ நின்று பேசும் இந்த‌
உதவாக் கரைகள் தாண்டி
ஓடைகளுள் புகுந்திடுவேன்
ஓடைகள் தொட்டுவிட்டால்
ஆறுகளும் சாத்தியமே.

என்ன கோபம் ?
மனதில் பட்டதையே கேட்கின்றேன்.
வலைகளுக்குள் அகப்பட்டால்..?
எப்படிக் கடல் சாத்தியம் ?

நான் சிக்கிப் போனாலும்
நான் சுமக்கும் என் கனவு
வலைகளுக்குள் சிக்காது
வலைகளை நினைத்தே நான்
என்னை நானா சிறை வைப்பேன் ?
நீலவண்ணக் கடல் கனவை
நாளும் வளர்ப்பேன் நான்
முடிந்த வரையும் நடப்பேன் நான்.

மேலே துள்ளிக்குதித்து தலைதூக்கி
கடல் காணும் தூரத்தை
மீண்டும் அளந்துவிட்டு
நீர்ப்பரப்பில் துள்ளி ஓடியது மீன்..

நீர்ப்ப‌ரப்புக் கண்ணாடி முகம்காட்ட
களித்துத் துள்ளிய கனவுகளோடு 
பேசத் துவங்கினேன்.

வலைகளென்ன செய்துவிடும் 
ந‌ம் கனவுகளை ?
துள்ளிக்குதித்து தலைதூக்கி
நம் கனவை தினமும் அளப்போம்.

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், பீனிக்ஸ்

**
தேன்சொட்டும் மலராகம் அமர்ந்த அறுகாற்ப்பறவையாய்
நான் மயங்கிய மதியழகாள்  மீன்விழி
மான்போல மருங்கிடினும் மதியகலா தமிழ்விழி
நித்திரை தொலைக்கவைக்கும் முத்திரை விழி
கண் கண்டதும் விளித்திடும் கவிதைமொழி
வரிப்புலியாய் எமை வார்க்கும் மறவிழி
நேர்கொண்ட பார்வையினால் நிமிர்ந்திடும் நிறைவிழி
கார் உள்ளளவும் கடல்நீர் உள்ளளவும்
இப்பார் உள்ளளவும் பண்பகலா பதுமைவிழி
விரிகடலும் வானும் வியக்கும் வியன்மொழி
நல்லோர் போற்றும் பணியாற்றும் நயன்விழி
தகைமைசால் தமிழ் போற்றும் தனிவிழி
பெண்ணியம் போற்றும் கலனான புதுவிழி
கேடுவரும் முன்பே விழிக்கும் நல்விழி
மட்டில்லா புகழுடை மறபுகாக்கும் மான்விழி
மானத்தை உயர்வாய் போற்றும் மதிவிழி
மரணமே வரினும் மடமைக்கு அஞ்சிடாது 
மானத்துடன் ஆர்த்தெழுந்து முழங்கும் விழி
தேன்சொட்டும் மலரான என்னவள் கயல்விழி

- கவிமுகில் ராம் விஜய் சென்னை

**

மீன் விழியாளே, உன்னை கண்டதும் ,
விண்மீனாய்  வந்தது  காதல்!
கரையை  சேர்ந்த  அலை  போல  உணர்ந்தேன் !!
கண்மை பூசிய உன் கண்கள் பனித்தபோது,
அந்த கடலும் உன் விழிநீரில் ஆனதோ என்றெண்ணி சோகத்தில் மூழ்கினேன்!
ஊடலில் நீ மௌனம் காத்தபோது,
நிலப்பரப்பில்  விழுந்த  மீனாய் துடித்தேன்!
என்னோடு  நீ  கைகோர்த்ததும் ,
கடல்  மீனாய்  இருந்த  என்  வாழ்வில்,
தனித்துவத்துடன்  மாறினேன்,
நீர்ப்பரப்பில்  ஒரு  (சுறா) மீனாக!

- பிரியா ஸ்ரீதர்   

**
நீலநிறம் பொருந்திய மீனே - இவ்வண்ணம்
நீபெற்று அழகுற என்ன தவம் செய்தையோ!
கோல மயிலும் உன்னிறமது கோவிந்தனாம்
கோபால கிருஷ்ணின் நிறமன்றோ!

வானும் நீல நிறம் கார்பெருகி வீழ்ந்து
நீர்பெருகியப் பார்க்கடலும் நீல நிறம்
அமுதளிக்க விசமருந்திய ஆதிமூலனும் நீலநிறம்
அழகுமிளிர் நீலக்கயலே நீயறிவாயோ?

நீர்பரப்பில் நீயும் நிலப்பரப்பில் நானும்
நீண்ட வான்வெளிப் பரப்பில் வளியொளியுமாய்
காணும்யாவிலும் காட்சியாய் காட்சிக்குச் சாட்சியாய்
பிரபஞ்ச நீட்சியான யாவுமொன்றேயாம்!

- கோ. ஹாலாஸ்யம் சிங்கப்பூர்.

**
அலையாத மனமெங்கும் சிலையாக நிற்கும்
கலையாத மேகமென கண்களும் கவி பாட
மலைக்கு முன் வதனமதில்
மை விழி உன் மையல்
தலை தூக்கும் நினைவுகளில்
நிலை பார்த்து தகிக்கும்,
வலை வீசும் கண்களது - நீர்
திவலைகளால் சூழ
அலைகடலின் நடுவினிலே
ஆர்ப் பரிககும் உள்ளம்
இமை மீதில் மீன்களென
இரு விழியில் உருளும்
கருவண்டு நடனமென
காண்போரும் களிக்க
ஆகாய கங்கையதில் மங்கை
அவள் நளினம், நீர்ப்பரப்பில்
மீனெனவே - நாளுமிங்கே துள்ள
நாட்களும் முன் செல்ல
நானும் இங்கே தொலைவில்
மானென்றும் - மீனென்றும் சொன்ன சொற்கள் மறைய
வெவ்வேறு உலகங்கள் - நமை
ஆட்கொண்ட தென்ன?
நாளும் நினைவுகளும்
நீர்ப்பரப்பில் துள்ளும்
மீனென்று _ நான் உள்ள
கழுகான சுற்றம் -வளைத்தோர் நாள் தூக்கி அந்த மீனைத் தான்
தின்னும்.

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**
நீர்ப் பரப்பில் ஒரு மீன்
தெளிந்த நீரோடையில் ஓடும் மீனே! 
தெவிட்டாத இன்புறுவேன் உன்னை காண்கையிலே! 
சுறுசுறுப்பாய் இயங்கும்  மீனே! 
சோம்பலை நீக்குவேன் உன்னை காண்கையிலே! 
ஒன்றாய் அலையாய் வருவாய் மீனே! 
ஒற்றுமையை உணர்ந்தேன் உன்னை காண்கையிலே! 
கண்ணைப் பறிக்கும் வண்ண மீனே!
உன்னில் கண்டேன் வசீகரமே! 
உன்னைப் பார்த்து நீந்த செய்தேன்! 
உன்னைப் பார்த்து வாழ்க்கை அறிந்தேன்! 
ஐந்தாம் அறிவில் இருக்கும் நீ    ஆறாம் அறிவை வென்றுவிட்டாய்-
மீனே! 
ஜலத்தில்  இருந்தாலும் நீ
கணித்து வாழ்ந்திடுவாய்-  நாங்கள்
நிலத்தில் இருந்தாலும் நிம்மதியாய் வாழ்வதில்லை! 
நீர்ப்பரப்பில்  மீனாக நீ...
நிலப்பரப்பில் மானிடனாக நான்...

- செந்தில்குமார். மு - ஓமன் 

**
நீர்ப்பரப்பில் ஒரு மீன் - கைகெட்டும் தூரத்தில்
பிடிப்பதற்குள் பாய்ந்தது நீருக்குள்  

வேலை வாய்ப்பும் கண்ணெதிரே - முயற்சிப்பதற்குள்
வேறொருவர் அவ்விடத்தில்

உயர்கல்வி வாய்ப்பு கண்ணெதிரே - முடியவில்லை 
பொருள் இல்லாமையால்

பதவி கண்ணெதிரே - முடியவில்லை
ஜாதியில்லாமையால்

நீர்ப்பரப்பில் ஒரு மீனாய் - கைக்கெட்டும் தூரத்தில்
இருந்து வாய்க்கு எட்டவில்லை.

சமுதாயத்தில் வாய்ப்புகள் கண்ணெதிரில் இருந்தும்
சமூக சீரழிவு காரணமாக கைக்கெட்டவில்லை.

நீர்ப்பரப்பில் ஒரு மீன் 

- ஆம்பூர் எம். அருண்குமார்

**
நம்மைப்போல விண்ணிலும் உண்டோ ?
மேலே வந்து,
நட்சத்திரங்களை ப்பார்த்து,
கண் சிமிட்டிவிட்டு மீன்கள்
மீண்டும் உள்ளே பதுங்கின !
என்ன பயம் ?
ஆழ்கடல் ஆராய்ச்சி செய்த மீன்களை
ஆழாக்கு நீரில்
அழ வைப்பான் ?
ஆற்றுக்குள் ஆட்டம் போட்டிருந்த
மீன்களை தொட்டிக்குள்
பூட்டி வைப்பான் ?
குளத்திற்குள் கும்மாளமிட்டவைகளை
அளந்து வைத்த பெட்டிக்குள்
அடைத்து வைப்பான்?
மனிதா ! நீ தான் கெட்டாய்?
எனக்குமா செயற்கை உணவு !
கண்ணாடிச் சுவர்களை
முட்டியபடி அழுதவண்ணம் ,
நீர்பரப்பில் சில வண்ண மீன்கள் !!

 - கவிஞர் டாக்டர். எஸ்.பார்த்தசாரதி

**
நீர்ப்பரப்பாய் மட்டுமே இவ்வுலகு உண்டென
நீந்திக்கொண்டே இருக்கின்ற மீன்
கண்டதில்லை
கரை என்ற ஒன்றை

கரை தொடுகையில்
நிரந்தரமாக அசையாமல் போய்விடும்
செதில்களும்
திமிர்த்தனமான வாலும்

கோட்டுக்குள் சுற்றவிடுகிறது வாழ்க்கை
கோடு தாண்டும் போது...

- கோ. மன்றவாணன்

**
அலைகடலின் நடுவில்.. 
அழகுற அமைந்த அத்தீவு..!!
அலைச்சறுக்கு விளையாடும்.. 
அந்த இளம் வீரன்..!!
அதற்கு அப்பாலே நங்கூரமிட்டு.. 
அசையாது நின்ற அக்கப்பல்..!!
ஆழ்கடலில் மீன்பிடிக்கும்.. 
அந்த தனித்தப் படகு..!!
அனைத்துமே என்விழிகளுக்கு.. 
நீர்ப்பரப்பில் ஒரு மீனாய்..!!

- ஆ. செந்தில் குமார்.

**
                           
நீர்ப் பரப்பில் ஒரு மீன்
நீர்ப் பரப்பில் மீனொன்று நின்று விளையாடுது
நிம்மதியைத் தேடி அது அங்குமிங்கும் ஓடுது!
ஊர்ப் பரப்பில் ஒண்டியாய் ஒரு சிறுவன் நிற்கிறான்
ஒத்தவர்கள் போனயிடம் அறியாமல் திகைக்கிறான்!
தேர்ப் பரப்பில் தெய்வமொன்று தனியாக இருக்கலாம்
தெய்வத்தை வணங்குபவரும் ஒற்றையாக இருக்கலாமோ?

கூட்டமாய் நீந்தியாடும் மீனுமேன் தனியானது
நீண்டடித்த கஜாவினால் உறவுகளை இழந்ததோ?
பாட்டமாய் வந்து மழை பயிர்களை அழித்தது
பார்த்திருந்த உழவர்களின் கண்களை நீர் நிறைத்தது!
வாட்டமாய் வாழ்ந்தவர்கள் வக்கற்றுப் போயினர்
வறுமையின் பிடியிலே தம்நிலை மறந்தனர்!

ஒருமீன் தனியாக ஒன்றுக்கும் உதவாது
உதவிடும் கரங்களே என்றைக்கும் வேண்டுவது!
பெருமீன் வேண்டுமெனில் பேணிடல் மிகவேண்டும்
பிரியமுடன் உதவிடவே அனைவரும் வரவேண்டும்!
உறுமீன் வருமளவும் ஓய்ந்திருத்தல் நலமாகும்
உலகையே ஆள்வதற்கு அதுவே கருவாகும்!

-ரெ.ஆத்மநாதன், அமெரிக்கா

**
கொட்டும் மழையில்
ஒதுங்கிய நானும்
பரிதவித்து நிற்கையிலே
கைகளில் ஏந்தி
நீர் நிறைந்த இறையின்
பாதங்களைச் சேவிக்க
வழி சொன்னவரே!
சுவர்களற்ற கேணியில்
நீந்தி நானும்
பச்சை தவளைகள்
நட்புடன் சிரித்தபடி
வாழ்கின்றேன்!
பகலவன் தாகத்தில்
குளிர்பானமாய் நீரை உறிஞ்ச
மாற்று ஊருணி மாற்ற 
யார் வருவார்?
வானமகள் கரு மேகத்துடன்
மழை அக்காள்
எனை நனைக்க
நீயும் அமிர்தவர்ஷிணி வாசிப்பாயோ!
அடுக்கக  உருவாக்க மயன்களிடம்
பச்சைதாவர  அத்தை குடும்பங்களை
குடியேற்றம் தூது செல்வாயோ!

- சீனி

**
மனையிலே சமைந்தபடி மாது நான்
ஒருத்தியாய் நிற்கின்றேன் – விழியில்
வருங்காலக் கணவனைச் சித்தரிக்க விழைகின்றேன்.

கலாச்சாரத்தைச் சீர்கெடுக்க நான்
சிறிதளவும் விரும்பவில்லை – பஞ்சணையில் 
வீழ்ந்தாலும் கனவில் ஆடவரின் தொல்லையில்லை.

பொன்னான புன்சிரிப்பை சர்வகாலமும் சிந்த
நான் விழைவேன் – சண்டையிட்டு நின்றாலும்
அலுங்காமல் அணைத்து வாஞ்சையுடன் குழைவேன்.

காமம் கொண்ட காதலுக்கு இந்த சுகம்
தெரியாதே – என் போல் கல்யாணத்தை 
எதிர்ப்பார்ப்போர்க்கு எந்த சுகமும் நிதர்சனமே.

வேர்கள் மண்ணுக்குள் இருக்கும் வரைதான் 
பூக்களின் மலர்ச்சி சாத்தியம் –யெளவனம் 
இருக்கும் வரைதான் யுவதிக்கு சந்ததியும் சாத்தியம்.

கற்றது அனைத்தும் அறிகின்றேன் நான் – நிதம்
ஊற்றி வைத்த கற்பனையில் மாறிமாறி சிணுங்கியும்
மெதுமெதுவே புலம்பியும் காலத்தைக் களிக்கின்றேன் 
பேரிளம்பெண்ணாகவும் - ஒரு முதிர்கன்னியாகவும்
வருவோர் போடும் அரிசிப்பொரிக்காய் எதிர்ப்பார்த்து
நீர்ப்பரப்பில் நீந்திக்கொண்டிருக்கும் குளத்துமீனாய் - நான்!

- ஜ.ரா. கோபாலகிருஷ்ணன், பெங்களூர்

**
ஆர்ப்பரிக்கும் அலைகடல்,
நீர்ப்பரப்பில் ஒரு மீன்,
ஓர்மத் தினவுடன் ஓர் துள்ளல்;
காரிருள் மேகத்தூடோர் பறவை,
சூரியக் கொதிப்பின் சூடாறா மணல்,
நேர்கீழாய் அதே கடல்;
பாரினில் மானிடர் வாழ்வதும் 
போரதில் வீரர்கள் வெல்வதும் - இஃது
ஓர் நிகழ்தகவு தானோ...?
நேர்மை,உண்மை,அன்பு, நீதி - நிலையாமை முன்
ஓர்துளைக் குவளையுள் இட்டவீழ் நீரோ...?

- குகதர்சனி (தமிழ்க்கிழவி), ஐக்கிய ராச்சியம்

**
நீர்ப்பரப்பில் ஒரு மீன்!
நீந்தியபடி அதனருகில் நீ!

நீண்டதொரு தூண்டிலுடன் கரையோரம் நான்!
வேறெவரும் அங்கில்லை நாம் மட்டும்தான்!

வீசுகிறேன் தூண்டிலை மீனுக்கு! 
விழித்தூண்டில் வீச்சோ மானுனக்கு!

உன் கூந்தலில் சிக்குகிறது 
கூரிய என் தூண்டிலின் முனை!
அப்போதுதான் அறிகிறேன் 
பெண்ணல்ல ஆணென்று உனை!

நினைப்பு பிழைப்பைக் கெடுத்தது!
மீன் கூட  எனைக்கண்டு சிரித்தது!

- நிலவை பார்த்திபன் 

**

நீர்ப்பரப்பில் ஒரு மீன்,
நீந்தத்துணிவில்லை ஏன்?

காற்றடித்தால் மடிவதும்,
நீர் வரத்தால் சரிவதும்,
அல்ல நெடு மரங்கள்,

மரம்தனின் ஆணிவேர்  பெரிது,
மரம் பற்றிய ஊன்றல் பெரிது,
எது வரினும் அசைக்க இயலா,

இதுபோலே மனித மனம்,
இலட்சியத்தில் ஊன்றட்டும்,
எத்தகைய இடர் துயர் தரினும்,
வெற்றி வரை முயற்சி இருப்பின்,
வரலாற்றில் தகு இடம் பெறுவான்,

விழிப்போம். மனக்கண் திறப்போம்.

விழி.எழு.விருட்சமாகுக!

-இனிய தமிழ் செல்வா, ஓமன்

**
 
தண்ணீர் தேசத்தின்
தனிக்காட்டு ராசாவாக
நீர்ப்பரப்பில் நீந்தித்திரியும் 
ஒரு மீன்!
 
விண்ணில் ஒளிர்வது
விண்மீன்கள் எனில் 
கடலின் ஆழத்தில் 
நீந்துவது கடல் மீன்கள் அன்றோ!
உச்சி முதல் பாதாளம் வரை
மீன்களின் ராஜ்யமே!

தண்ணீருக்காக 
அலையும் தேசத்தில் 
தண்ணீர் தேசத்தில் 
அலையும் மீன்கள்!

இணைய வலையில் சிக்கிய ஆணும் பெண்ணும்
இதய வலையில் சிக்கிய ஆணும் பெண்ணும்
நரம்பு வலையில் சிக்கிய மீன்களே!
நீர்ப்பரப்பில் இரைதேடும் மீனாய்
பெண்ணின் கண்களும்!
நீர்ப்பரப்பில் இரை தேடும் மீனாய் 
ஆணின் எண்ணங்களும்!
நீந்தியே கடக்கின்றனர் 
பிறவிப்பெருங்கடலை!

- கு.முருகேசன்

**

நித்தம் நித்தம் செத்து பிழைக்கும்
நீரியில்லை எனில் வாழமுடியாமல்
தவிக்கும்
நிர்பரப்பில் மட்டுமே நீந்தி நீந்தி
ரசிக்கும்
நிமிடத்திற்கு ஒருமுறை செதில்களால் சுவாசிக்கும்
தண்ணீரில் வாழ்ந்தால் மட்டுமே
வாழ்வு நீடிக்கும்
இல்லை எனில்
எங்களின் வாழ்வு போல்
அந்நிய தேசத்தில் அகதிகளாய்
அவமானப்பட்டு அலைகடல்
மீன்களாய் கரையோரம் மடியும்

- காசிநாதன் சுதா

**

நீர்ப்பரப்பில் ஒரு மீன்.
மெல்லப் பேசத் துவங்கினோம்.

குளம் தாண்டி வாய்க்கால் வழியோடி
ஓடைகளும் குதித்தோடி ஆறுகள் நீந்தி
கடல் பார்க்கும் கனவுண்டோ ?

இல்லாத இமை மூடி
கண் திறந்தே உறங்குகையில்
தனியே விலகி என்னையே தேடுகையில்
தோள்கள் வலிக்க நீந்திச் சலிக்கையில்
கடல் கனவு வருவதுண்டு
மேலே துள்ளிக்குதித்து தலைதூக்கி
கடல் காணும் தூரத்தை
நானும் தான் அளப்பதுண்டு.

இன்னும்
குளத்தின் கரையே தாண்டவில்லை
எவ்வளவு நாள் ஆகும்
கடல்தூரம் வசப்படுமா ?

தெரியும் தெரியும்
ஒரு பெருமழை போதும்
கண்மாயும் கரை புரண்டால்
நீ நின்று பேசும் இந்த‌
உதவாக் கரைகள் தாண்டி
ஓடைகளுள் புகுந்திடுவேன்
ஓடைகள் தொட்டுவிட்டால்
ஆறுகளும் சாத்தியமே.

என்ன கோபம் ?
மனதில் பட்டதையே கேட்கின்றேன்.
வலைகளுக்குள் அகப்பட்டால்..?
எப்படிக் கடல் சாத்தியம் ?

சுமக்கும் என் கனவுகள்
வலைகளுக்குள் சிக்காது
வலைகளை நினைத்தே நான்
கனவினையா சிறை வைப்பேன் ?
கனவுகள் கணத்துப் பெருகி
வலைகளும் கிழியக் கூடும்
நீலவண்ணக் கடல் கனவை
நாளும் வளர்ப்பேன் நான்
தினமும் நடப்பேன் நான்
கடல் காணவில்லை என்றாலும்
கடல்காண ந‌டந்த தூரங்கள்
தோள்வலிக்கச் செய்த முய‌ற்சிகள்
கனவைவிடப் பெரும் மகிழ்வு

மேலே துள்ளிக்குதித்து தலைதூக்கி
கடல் காணும் தூரத்தை
மீண்டும் அளந்துவிட்டு
நீர்ப்பரப்பில் துள்ளி ஓடியது மீன்..

நீர்ப்ப‌ரப்புக் கண்ணாடி முகம்காட்ட
களித்துத் துள்ளிய கனவுகளோடு 
பேசத் துவங்கினேன்.

வலைகளென்ன செய்துவிடும் 
ந‌ம் கனவுகளை ?
துள்ளிக்குதித்து தலைதூக்கி
நம் கனவை தினமும் அளப்போம்.

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன்,  அமெரிக்கா

**
அடைப்பட்டது தெரியபடாமல்
வரவேற்பு அறையில்
வைக்கப்பட்டிருந்தது வாஸ்துவின்
நலம்பயக்கும்
கண்ணாடி பேழைக்குள் 
வண்ண மீன்கள்

கண்ணாடி வளாகத்தில்
நீருக்குள்
துழாவிக் கொண்டிருந்தன 
உறவுகளை

வேடிக்கைப் பார்க்கும்
வினோதர்களை
விபரீத எண்ணங்களால்
அலைமோதிக் கொண்டிருக்க
திட்டமிடும்
அடக்குமுறைகள் காதில் விழ
அங்குமிங்குமாக
அலைந்து கொண்டிருந்தன

புலம் பெயர்த்திய கொடூரத்தை
எண்ணி
அங்கேயே விதைத்துக் கொண்டிருந்தன
தம்மை

விடுவிக்க
யாரேனும் வருவார்களா என்று
கண்ணாடி சுவர்களுக்குள்ளிருந்து
எதிர்ப்பபார்த்துக் கொண்டிருந்தது
நீர்ப்பரப்பில் தலைமை மீன்...

- கவிஞர். கா.அமீர்ஜான்

**

துடுப்புபோல கைகள் உண்டு-நீரில்
துவண்டுவிடாத உடலும் உண்டு..
துடிப்பான இதயமும் உண்டு-நீரில்
துள்ளிச்செல்ல வாலும் உண்டு..

மீன்தொட்டிதான் என் வீடு-நீயும்
மகிழ்வுடன் என்னோடு விளையாடு..
மனிதனுக்கும் தருவேன் மகிழ்ச்சி-அதனால்
மனமும் உணர்ந்திடும் புத்துணர்ச்சி..

நீருக்குள்தான் நான் வாழ்வேன்-நான்
நிலம் சென்றால்தான் மடிவேன்..
நீருக்குள்தான் என் சுவாசம்-நான்
நீந்துகையில் நீருக்கும் புதுவாசம்..

வலைக்குள் சென்றால் நானும்பலி-அது
வருவாய்க்கு மீனவன்இட்ட வழி..
விலைக்குபோனால் நானும் உணவோடு-இல்லை
வெயிலில் காய்ந்தால் நானும்கருவாடு..

தூண்டில் போடும் புதுஉலகம்-அதை
தாண்டிச்சென்றால் துன்பம் விலகும்..
துணிவோடு எதிர்நீச்சல் போடு-வாழ்வில்
தடைகள்வந்தால் எதிர்த்துப் போராடு..

- கவிஞர் நா. நடராசு, கோவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com