நியூசிலாந்து வீரரான டெவோன் கான்வேவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதால், ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய கான்வே, பந்தை பிடிக்க முயற்சித்தபோது இடது கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது.
அவரது காயம் குறித்து அந்நாட்டின் கிரிக்கெட் வாரிய மருத்துவர்கள் வெளியிட்ட செய்தியில், கான்வேவின் காயம் குணமடைய நீண்ட காலம் எடுக்கும் என்பதால், ஓரிரு நாளில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், காயம் குணமடைய 8 வாரங்கள் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனால், வருகின்ற 22-ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கான்வே விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை அணியின் நட்சத்திர தொடக்க வீரரான கான்வே, கடந்தாண்டு ஐபிஎல் இறுதிச் சுற்றில் கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும், சென்னை அணி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், மே மாதம் வரை கான்வே விளையாடவில்லை என்றால், இந்தாண்டு பிளே-ஆஃப் சுற்றில் மட்டுமே பங்கேற்கும் வாய்ப்புள்ளது. இது சென்னை அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
இருப்பினும், இந்தாண்டு சென்னை அணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு நியூசிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திரா, தொடக்க வீரராக களமிறக்க அணியின் நிர்வாகம் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய ரச்சின், 3 சதங்கள், 2 அரைசதங்களுடன் 578 ரன்கள் குவித்தார்.
தற்போது ரச்சின் ரவீந்திரா நல்ல ஃபார்மில் இருப்பதால், சென்னை அணிக்காகவும் தொடக்க வீரராக களமிறங்கலாம். அதேபோல், ரஹானேவும் தொடக்க வீரராக விளையாடுவார் என்பதால், பயிற்சியாளரும், கேப்டன் தோனியும்தான் இறுதி முடிவை எடுப்பர்.