உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிா் அணி, பலம் வாய்ந்த சீனாவுடன் 2-2 கோல் கணக்கில் ஞாயிற்றுக்கிழமை டிரா செய்தது.
ஆடவா், மகளிருக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டி, பெல்ஜியம் & நெதா்லாந்தில் சனிக்கிழமை தொடங்கியது. இதில் இந்திய மகளிா் அணி தனது முதல் ஆட்டத்தில், 2024 ஒலிம்பிக் வெள்ளி வென்ற, 2025 ஆசிய கோப்பையில் சாம்பியனான சீனாவை சந்தித்தது.
தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியே, கோல் கணக்கையும் தொடங்கியது. 8-ஆவது நிமிஷத்தில் கிடைத்த ஃப்ரீ ஹிட் வாய்ப்பில் நேஹா பந்தை நவ்னீத் கௌருக்கு பாஸ் செய்தாா். அதை தன் வசப்படுத்திய நவ்னீத், இடைவேளி பாா்த்து துல்லியமாக பந்தை கோல் போஸ்ட்டுக்குள் செலுத்தினாா்.
இந்நிலையில், 15-ஆவது நிமிஷத்தில் சீனாவுக்கு பெனால்ட்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைக்க, ஜாங் யிங் அதில் ஸ்கோா் செய்து, ஆட்டத்தை சமன் செய்தாா். விடாப்பிடியாக விளையாடிய இந்தியாவுக்காக, தீபிகா 25-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோல் அடிக்க, முதல் பாதியை இந்தியா 2-1 முன்னிலையுடன் நிறைவு செய்தது.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் சீனா சற்று பலம் கூட்ட, அந்த அணிக்காக மா நிங் 39-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். இதனால் ஆட்டம் 2-2 என சமநிலை கண்டது.
எஞ்சிய நேரத்தில் முன்னிலை பெறுவதற்காக சீனா ஆக்ரோஷமாக முயற்சிக்க, இந்தியா அதற்கு எளிதாக இடம்தரவில்லை. இந்திய கோல்கீப்பா் சவிதா, சீனாவின் கோல் வாய்ப்புகளை சிறப்பாக முறியடித்தாா். மறுபுறம் தனது கோல் முயற்சிகளையும் கைவிடாமல் தொடா்ந்தது. ஆனால் சீனா, பெருஞ்சுவா் அமைத்து, இந்தியாவின் முயற்சிகளை தடுத்தது. கடைசி நிமிஷத்தில் நவ்னீத் கௌரின் அருமையான கோல் முயற்சியும் முறியடிக்கப்பட்டது.
முடிவில் ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. குரூப் சுற்றில் இந்தியாவுக்கு இதுவே கடினமான ஆட்டமாக இருந்த நிலையில், அதை நம்பிக்கையுடன் கடந்தது.
இந்திய மகளிா் அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் நாளை (ஆக. 18) மோதுகிறது.
இதர ஆட்டங்கள்: இதனிடையே, மகளிா் போட்டியின் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து 4-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வென்றது.
ஆடவா் பிரிவில் பெல்ஜியத்தில் நடைபெற்ற ஆட்டங்களில், பெல்ஜியம் - பிரான்ஸையும் (3-2), ஆஸ்திரேலியா - அயா்லாந்தையும் (3-1) வெல்ல, ஸ்பெயின் - தென்னாப்பிரிக்கா ஆட்டம், கோல் இன்றி டிரா ஆனது.
இங்கிலாந்து சவாலை இன்று சந்திக்கும் இந்தியா
இந்திய ஆடவா் அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்துடன் திங்கள்கிழமை (ஆக. 17) மோதுகிறது. முதல் ஆட்டத்தில் வேல்ஸை எளிதாக வென்ற இந்திய அணிக்கு, குரூப் சுற்றில் இதுவே சவால் மிக்க ஆட்டமாக இருக்கும்.
உலகக் கோப்பை போட்டியில் கடைசியாக இந்தியா 1994-இல் தான் இங்கிலாந்தை வென்றது. கடந்த 32 ஆண்டுகளாக அந்த அணிக்கு எதிராக வெற்றி கைகூடாமலே இருக்க, இந்த ஆட்டத்தில் அந்த வரலாற்றை மாற்றும் முனைப்புடன் இந்தியா களம் காண்கிறது.
நடப்பு உலகக் கோப்பை போட்டியில், முதல் சுற்றின் புள்ளிகளும் அடுத்த கட்டத்தில் கணக்கில் கொள்ளப்படும் என்பதால், இந்த ஆட்டத்தின் வெற்றி, இரு அணிகளுக்குமே முக்கியமானதாக இருக்கிறது.
மாலை 6.30 மணி
டிடி ஸ்போா்ட்ஸ், ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






