
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான தொடக்கத்தைத் தந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று (டிசம்பர் 6) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
இதையும் படிக்க: அடிலெய்டு டெஸ்ட்டின் முதல் நாளில் புதிய சாதனை!
180 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா
டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி 54 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கே.எல்.ராகுல் 37 ரன்களும், ஷுப்மன் கில் 31 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலாண்ட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியா - 86/1
இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி ஒரு விக்கெட்டினை இழந்து 86 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 13 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
நாதன் மெக்ஸ்வீனி 38 ரன்களுடனும், மார்னஸ் லபுஷேன் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி இந்தியாவைக் காட்டிலும் 94 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.