
இந்தியாவுக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு அவரது தந்தை அனுப்பிய குறுஞ்செய்தி குறித்து ரச்சின் ரவீந்திரா பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. மூன்று போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்தியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றியையும் பதிவு செய்தது.
அப்பாவின் குறுஞ்செய்தி
இந்தியாவுக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு அவரது தந்தை குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அது தொடர்பாக ரச்சின் ரவீந்திரா பேசியதாவது: உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் என்ற வார்த்தைகளை எனது தந்தையிடமிருந்து நான் அடிக்கடி கேட்டதில்லை. நாங்கள் வெற்றி பெற்ற பிறகு, உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் என அவரிடமிருந்து வந்த குறுஞ்செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது.
முதல் டெஸ்ட் போட்டியின்போது, என்னுடைய அப்பா மைதானத்துக்கு வந்து நேரடியாக நான் விளையாடுவதை பார்த்தார். பெங்களூரு எனது அப்பாவின் சொந்த ஊர். அங்கு அவரது முன்பு விளையாடியது மகிழ்ச்சியளித்தது. நான் விளையாடுவதை எனது அம்மா வீட்டில் தொலைக்காட்சியில் அசையாமல் பார்த்துக் கொண்டிருப்பார் என உறுதியாகத் தெரியும் என்றார்.
பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு ரச்சின் ரவீந்திரா முக்கிய காரணமாக இருந்தார். அந்தப் போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் 134 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்களும் அடித்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.