
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரையும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க: தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்..! 99 ரன்களில் ஆட்டமிழப்பு!
ரச்சின் ரவீந்திரா, சர்ஃபராஸ் கான் சதம்
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ரச்சின் ரவீந்திரா சதம் விளாசி அசத்தினார். அவர் 157 பந்துகளில் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்திய அணி தற்போது அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி இந்திய வீரர்கள் ரன்கள் குவித்தனர். கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் அரைசதம் கடந்து அசத்தினர். சர்ஃபராஸ் கான் மற்றும் ரிஷப் பந்த் இடையேயான பார்ட்னர்ஷிப் இந்திய அணி முன்னிலை பெற காரணமாக அமைந்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ் கான் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 195 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 18 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!
சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா மற்றும் சர்ஃபராஸ் கான் இருவருக்கும் சச்சின் டெண்டுல்கர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
ரச்சின் ரவீந்திரா மற்றும் சர்ஃபராஸ் கான் குறித்து அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: நமது பூர்வீகத்துடன் நம்மை இணைக்கும் சக்தி கிரிக்கெட்டுக்கு இருக்கிறது. ரச்சின் ரவீந்திராவுக்கும் பெங்களூருவுக்கும் சிறப்பான பிணைப்பு இருக்கிறது. ரச்சின் ரவீந்திரா பெங்களூவை பூர்வீகமாக கொண்டவர். அவரது குடும்பத்தினர் பெங்களூவைச் சேர்ந்தவர்கள். அவரது பெயரில் மேலுமொரு சதம் சேர்ந்துள்ளது.
இந்திய அணிக்கு மிகவும் தேவையான சூழலில் சர்ஃபராஸ் கான் அவரது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்துள்ளார். எப்படிப்பட்ட சிறப்பான தருணம். திறமை வாய்ந்த இளம் வீரர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் சர்ஃபராஸ் கான் இருவருக்கும் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.