
இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க விரும்புவதாக ஸ்ரேயாஸ் ஐயர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ரஞ்சி கோப்பை எலைட் தொடரில் மகாராஷ்டிரத்துக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசி அசத்தினார். அவர் 190 பந்துகளில் 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
29 வயதாகும் ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஆண்டு முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது சிவுப்பு பந்து போட்டிகளில் தனது முதல் சதத்தை அவர் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பாக, கடந்த 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்திருந்தார்.
டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க விருப்பம்
மும்பை அணிக்காக சதம் விளாசிய பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சதம் அடித்தது சிறப்பான உணர்வைக் கொடுத்துள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு சிவப்பு பந்து போட்டிகளில் சதம் விளாசியது மகிழ்ச்சியளிக்கிறது. காயம் காரணமாக என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது. ஆனால், நீண்ட நாள்களுக்குப் பிறகு சதம் அடித்துள்ளது மிகவும் சிறப்பான உணர்வைக் கொடுத்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், எதுவும் நமது கைகளில் இல்லை. தொடர்ச்சியாக எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளேன் என்றார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறவில்லை.
ஸ்ரேயாஸ் ஐயர் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.