இலக்கு குறைவாக இருக்கலாம், இந்தியாவை வெல்வது எளிதல்ல: நியூசி. வேகப் பந்துவீச்சாளர்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது எளிதாக இருக்கப் போவதில்லை என நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலக்கு குறைவாக இருக்கலாம், இந்தியாவை வெல்வது எளிதல்ல: நியூசி. வேகப் பந்துவீச்சாளர்
படம் | AP
Published on
Updated on
2 min read

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது எளிதாக இருக்கப் போவதில்லை என நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் வில்லியம் ஓ’ரூர்க் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 402 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ரச்சின் ரவீந்திரா சதம் விளாசி அசத்தினார். அவர் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டெவான் கான்வே 91 ரன்களும், டிம் சௌதி 65 ரன்களும் எடுத்தனர்.

107 ரன்கள் இலக்கு

முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிவிலிருந்து மீண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

சிறப்பாக விளையாடிய சர்ஃபராஸ் கான் சதம் விளாசி அசத்தினார். அவர் 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அதிரடியில் மிரட்டிய ரிஷப் பந்த் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஒரு ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். விராட் கோலி 70 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி மற்றும் வில்லியம் ஓ’ரூர்க் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி மற்றும் கிளன் பிளிப்ஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்திய அணி நியூசிலாந்தைக் காட்டிலும் 106 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து, நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை வெல்வது எளிதல்ல

107 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்க உள்ள நிலையிலும், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது எளிதாக இருக்கப் போவதில்லை என நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் வில்லியம் ஓ’ரூர்க் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

வில்லியம் ஓ’ரூர்க்
வில்லியம் ஓ’ரூர்க்படம் | AP

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த சூழலில் இந்திய அணியை வெல்வது எளிது எனக் கூறமாட்டேன். உலகத் தரத்திலான அணிக்கு எதிராக இலக்கை துரத்தவுள்ளோம். ஆனால், மிகுந்த தன்னம்பிக்கையுடன் நாளை ஆட்டத்தைத் தொடங்குவோம். மழை குறுக்கிடாமல் இருந்தால், நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ரிஷப் பந்த் மற்றும் சர்ஃபராஸ் கான் சிறப்பாக விளையாடி நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நின்றனர். அவர்கள் மிகவும் அருமையாக பேட்டிங் செய்தனர். ஆனால், புதிய பந்து எங்களுக்கு உதவியது. சிறப்பாக சென்று கொண்டிருந்த பார்ட்னர்ஷிப்பை டிம் சௌதி உடைத்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அதன் பின், தொடர்ச்சியாக விக்கெட்டுகளைக் கைப்பற்றினோம் என்றார்.

வில்லியம் ஓ’ரூர்க் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com