ஷிவம் துபேவுக்கு ஹர்ஷித் ராணா சரியான மாற்று வீரரா? முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ஷிவம் துபேவுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பேசியுள்ளார்.
ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா
ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ஷிவம் துபேவுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று முன் தினம் (ஜனவரி 31) புணேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் ஷிவம் துபேவுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டது மிகப் பெரிய சர்ச்சையானது. பேட்டிங் செய்கையில், ஷிவம் துபேவுக்கு அவரது தலைக்கவசத்தில் பந்து பலமாக தாக்கியது. அதனால், அவருக்கு தலையில் வலி இருப்பதாகக் கூறி அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார். ஷிவம் துபேவுக்கு இணையான மாற்று வீரரை இந்திய அணி களமிறக்கவில்லை என்பது பெரும் பேசுபொருளானது.

சுனில் கவாஸ்கர் கூறுவதென்ன?

ஷிவம் துபேவுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டது சர்ச்சையானதையடுத்து, இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிராக புணேவில் நடைபெற்ற போட்டியில் ஷிவம் துபேவின் தலைக்கவசத்தில் பந்து பலமாக தாக்கிய பிறகும் அவர் விளையாடினார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்படவில்லை. அதனால், அதன் பின் அவருக்குப் பதிலாக ஃபீல்டிங்கின்போது மாற்று வீரரை அனுமதித்ததே தவறு. பந்து தலைக்கவசத்தில் பலமாக பட்டதால் அவருக்கு அசௌகரியம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அவருக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட வீரர் ஃபீல்டிங் மட்டும் செய்திருக்க வேண்டும். பந்து வீசியிருக்கக் கூடாது.

ஷிவம் துபேவுக்கு இணையான மாற்று வீரர் களமிறக்கப்படவில்லை. ஹர்ஷித் ராணா ஷிவம் துபேவுக்கு இணையான மாற்று வீரர் கிடையாது. அதனால், இங்கிலாந்து அணி அதிருப்தி தெரிவித்துள்ளதை தவறென கூற முடியாது. இந்திய அணி மிகவும் சிறப்பான அணி. இந்திய அணிக்கு இதுபோன்ற செயல்களால் வரும் வெற்றி தேவையில்லை. இந்திய அணி சிறப்பான அணி என்பதை நிரூபிக்க மும்பையில் நடைபெறும் கடைசி டி20 போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com