தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

100-வது போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர்!

இலங்கை அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான திமுத் கருணாரத்னே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

News image

திமுத் கருணாரத்னே (கோப்புப் படம்) - படம் | திமுத் கருணாரத்னே (எக்ஸ்)

Updated On :4 பிப்ரவரி 2025, 4:35 pm IST

இலங்கை அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான திமுத் கருணாரத்னே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

36 வயதாகும் திமுத் கருணாரத்னே இலங்கை அணிக்காக இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,172 ரன்கள் குவித்துள்ளார். அதில் 16 சதங்கள் மற்றும் 34 அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி 39.41 ஆக உள்ளது.

ஓய்வை அறிவித்த திமுத் கருணாரத்னே

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திமுத் கருணாரத்னே அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி திமுத் கருணாரத்னே, இலங்கை அணிக்காக விளையாடவுள்ள 100-வது டெஸ்ட் போட்டியாகும். இலங்கை அணிக்காக கருணாரத்னே 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,316 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 11 அரைசதங்கள் அடங்கும்.

ஓய்வு முடிவை அறிவித்து திமுத் கருணாரத்னே பேசியதாவது: ஓராண்டில் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் உத்வேகத்தோடு இருப்பது மிகவும் கடினம். அதிலும், ஃபார்மில் இருக்க வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அறிமுகப்படுத்தப்பட்ட 2-3 ஆண்டுகளில் நாங்கள் மிகவும் குறைவான இருதரப்பு தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ளோம்.

எனக்கு தனிப்பட்ட சில திட்டங்கள் இருக்கின்றன. அணியில் உள்ள மூத்த வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால் போன்ற வீரர்களுடன் ஆலோசித்துவிட்டு அதன் பிறகே எனது ஓய்வு முடிவை எடுத்துள்ளேன். ஒரே நேரத்தில் மூத்த வீரர்கள் மூவரும் ஓய்வை அறிவிப்பதற்கு பதிலாக ஒவ்வொருவராக ஓய்வு பெறுவது நல்லது.

இதுவரை இலங்கை அணிக்காக நான் சாதித்துள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கை அணிக்காக 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள மகிழ்ச்சியான தருணத்தில் எனது ஓய்வு முடிவை அறிவிக்க விரும்பினேன். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தனது நாட்டுக்காக 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 10,000 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அது மிகப் பெரிய சாதனை. நீங்கள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கும்போது, இதுபோன்ற எந்தவொரு இலக்குகளும் இருக்காது. ஆனால், காலப்போக்கில் பல்வேறு இலக்குகள் உங்கள் முன் இருக்கும்.

இலங்கை அணி ஓராண்டில் மிகவும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால், 10,000 ரன்கள் குவிக்கும் இலக்கு மிகவும் தொலை தூரத்தில் இருக்கிறது. இலங்கை அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதையே நான் சாதனையாக உணர்கிறேன் என்றார்.

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 6) காலேவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.