பந்துவீச்சை தேர்வு செய்த பென் ஸ்டோக்ஸின் முடிவு சரியா? டிம் சௌதி பதில்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது குறித்து...
england captain ben stokes
பென் ஸ்டோக்ஸ்படம் | AP
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது குறித்து அந்த அணியின் பந்துவீச்சு ஆலோசகர் டிம் சௌதி பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூன் 20) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஷுப்மன் கில்லும் சதம் விளாசி அசத்தினார். துணைக் கேப்டன் ரிஷப் பந்த் அரைசதம் கடந்தார்.

பென் ஸ்டோக்ஸின் முடிவு சரியா?

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ததை ஆதரித்து அந்த அணியின் பந்துவீச்சு ஆலோசகர் டிம் சௌதி பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேற்று ஆடுகளத்தில் சிறிதளவு மட்டுமே ஈரப்பதம் இருந்தது. இன்றும் ஆடுகளத்தில் சிறிதளவு மட்டுமே ஈரப்பதம் இருப்பதாகத் தெரிகிறது. அதன் காரணமாகவே இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக முடிவெடுத்தது. ஆடுகளத்தின் தன்மையைப் பார்த்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது. எல்லா நேரங்களிலும் நமது முடிவுகள் சரியாக இருக்க முடியாது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேரம் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். கே.எல்.ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இருவருமே சிறப்பாக விளையாடினார்கள். கேப்டன் ஷுப்மன் கில் நன்றாக விளையாடினார். இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் பலரும் இங்கிலாந்தில் இதற்கு முன்பாக விளையாடியதில்லை. இருப்பினும், அவர்கள் மிகவும் திறமைசாலிகள் என்பதை உறுதியாகக் கூற முடியும்.

இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுகிறார். அவர் இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார். இங்கிலாந்து அணியின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. இதற்கு முன்பாக இதுபோன்ற சூழல்களில் இங்கிலாந்து சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆட்டத்தில் ஒருநாள் மட்டுமே முடிந்திருக்கிறது. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்றார்.

முன்னதாக, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சு முடிவை அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com