
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
அஜிங்க்யா ரஹானே கேப்டன்
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடவுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவை அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது.
கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக வழிநடத்தி வந்தார். அவர் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டு, அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அஜிங்க்யா ரஹானே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோலி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் நீண்ட காலம் பயணித்து வரும் வெங்கடேஷ் ஐயர், அந்த அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ரஹானே பேசியதாவது: ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வரும் கொல்கத்தா அணியை கேப்டனாக வழிநடத்த கிடைத்திருக்கும் வாய்ப்பை கௌரவமாக கருதுகிறேன். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சமபலத்துடன் இருப்பதாக நினைக்கிறேன். நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள அனைவருடனும் இணைந்து பயணிக்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.