
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட மாட்டாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடரின் முதல் போட்டி நாளை (மே 28) லாகூரில் உள்ள கடாஃபி திடலில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், பொருளாதார சூழல்களைக் கருத்தில்கொண்டு வங்கதேசத்துக்கு எதிரான இந்த டி20 தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட மாட்டாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தானின் நம்பத்தகுந்த கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், அது ஒளிபரப்பாளர்களுக்கு பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், இந்த தொடரில் நடுவர்களின் தீர்ப்பை மேல்முறையீடு செய்து மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்த டி20 தொடரில் வங்கதேசத்தின் முக்கியமான வீரர்கள் விளையாடமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் விளையாடியபோது, காயம் ஏற்பட்டதால் வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு வீரர்கள் மட்டுமின்றி, வங்கதேச அணியின் உதவிப் பணியாளர்களும் இந்த தொடருக்கு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழலுக்குப் பிறகு, மீண்டும் தொடங்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலும் டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.