
புதிய சகாப்தம் தொடங்கிவிட்டது; டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு பேசிய ஜோ ரூட்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற பிறகு புதிய சகாப்தம் தொடங்கிவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் மற்றும் கேப்டன் ஜோ ரூட் - படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற பிறகு புதிய சகாப்தம் தொடங்கிவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த பிரண்டன் மெக்கல்லம் அண்மையில் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின், பென் ஸ்டோக்ஸும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
இதனையடுத்து, டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீஃபன் பிளெமிங்கும், கேப்டனாக ஜோ ரூட்டும் நியமிக்கப்பட்டனர். இந்தக் கூட்டணி தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று அசத்தியுள்ளது.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு புதிய சகாப்தம் தொடங்கிவிட்டதாக ஜோ ரூட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தும்போது, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தோம். ஆனால், அங்கிருந்து விக்கெட் விடாமல் வெற்றி பெற்றது சிறப்பானது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இரண்டு டெஸ்ட் தொடர்களை இழந்திருந்தோம். அதனால், இந்தத் தொடர் எங்களுக்கு மிகவும் சவாலானதாகவே இருந்தது. வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்கள். தொடரை முழுமையாக வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங்குடன் இணைந்து புதிய சகாப்தம் தொடங்கிவிட்டது. ஆனால், முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அணியை இப்படி உருவாக்கித் தரவில்லையென்றால் இதனை எங்களால் செய்திருக்க முடியாது. நாங்கள் ஒரு அணியாக தொடர்ச்சியாக எங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறோம் என்றார்.
Summary
England captain Joe Root has stated that a new era has begun after a clean sweep of the Test series against Pakistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






