கொல்கத்தா அணியில் விளையாடி வரும் தமிழரான வெங்கடேஷ் ஐயர், ஐபிஎல் 2022 ஏலத்தில் ரூ. 12 முதல் ரூ. 14 கோடி வரை அள்ளுவார் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டியின் புதிய நட்சத்திரமான வெங்கடேஷ் ஐயர், கொல்கத்தா அணி வீரராக அசத்தி வருகிறார். இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் இரு அரை சதங்களுடன் 193 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 141.91. இதுவரை 7.3 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். எகானமி - 8.53. இதனால் ஐபிஎல் போட்டியின் புதிய நட்சத்திரம், புதிய ஆல்ரவுண்டராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
இந்தூரில் வசிக்கும் 26 வயது வெங்கடேஷ் ஐயர், தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டிக்காக நடைபெறும் மெகா ஏலத்தில் வெங்கடேஷ் ஐயருக்கு ரூ. 14 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். கிரிக்இன்ஃபோ இணையத்தளத்தில் அவர் கூறியதாவது:
ஐபிஎல் 2022 ஏலத்தில் ரூ. 12 கோடி முதல் ரூ. 14 கோடி வரை வெங்கடேஷ் ஐயருக்குக் கிடைக்கும். அவருடைய பங்களிப்பு, அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல. அவருடைய முதல் தர ஆட்டம் மற்றும் லிஸ்ட் ஏ சாதனைகளும் அபாரமாக உள்ளன. உள்ளூர் கிரிக்கெட்டிலும் அதிக ரன்களை அதிக ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். நன்கு பேட்டிங் செய்யத் தெரிந்த வீரர் அவர். மேலும் பந்துவீச்சாளரும் கூட. பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்த முடியும் என்பதைக் கடைசி ஆட்டத்தில் நிரூபித்துள்ளார். எனவே ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு அவர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறியுள்ளார்.