கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர், இந்திய அணிக்காக விளையாட வாய்ப்புள்ளது என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
ஷார்ஜாவில் நடைபெற்ற தில்லி - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த தில்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த கொல்கத்தா அணி பரபரப்பான முறையில் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. வெங்கடேஷ் ஐயர் 55 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது அவருக்குக் கிடைத்தது.
தில்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், வெங்கடேஷ் ஐயர் பற்றி கூறியதாவது:
கொல்கத்தா அணி பேட்டிங் செய்தபோது முதல் 10 ஓவர்களில் பனிப்பொழிவின் காரணமாக பேட்டிங் செய்வது சுலபமாக இருந்தது. எங்கள் அணிக்கு அத்தகைய சூழல் இல்லை. எனவே நாங்கள் இன்னும் அதிகமான ரன்களை எடுத்திருக்க வேண்டும். கேகேஆர் அணியின் தொடக்கக் கூட்டணி அபாரமாக விளையாடியது. வெங்கடேஷ் ஐயர் என்கிற நல்ல வீரரை கேகேஆர் அணி அறிமுகம் செய்துள்ளது. கொல்கத்தா அணியின் மகத்தான வீரராக அவர் இருப்பார். வருங்காலத்தில் இந்தியாவுக்காகவும் விளையாட வாய்ப்புண்டு என்றார்.