கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்குப் பதிலாகப் புதிய வீரரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நடராஜனுடன் தொடர்பில் இருந்த சக வீரர் விஜய் சங்கர், விஜய் குமார் (அணி மேலாளர்), ஷ்யாம் சுந்தர் (பிசியோதெரபிஸ்ட்), அஞ்சனா வன்னா (மருத்துவர்), துஷார் கேத்கர் (லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்), வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர் பி. கணேசன் ஆகியோரும் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் நடராஜனுக்குப் பதிலாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 21 வயது வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை சன்ரைசர்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் வலைப்பயிற்சி வீரராக உள்ள மாலிக், குறுகிய கால கரோனா மாற்று வீரராகத் தேர்வாகியுள்ளார். நடராஜன் குணமான பிறகு சன்ரைசர்ஸ் அணியில் மீண்டும் இணைந்து கொள்வார். இந்திய உள்ளூர் போட்டிகளில் ஒரு டி20 மற்றும் ஒரு லிஸ்ட் ஏ ஆட்டங்களில் மட்டுமே மாலிக் விளையாடியுள்ளார்.