ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை முதலில் பேட் செய்தது.
அந்த அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. மும்பை அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, நமன் திர் மற்றும் டிவால்ட் பிரேவிஸ் மூவரும் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சியளித்தனர். அதன்பின் இஷான் கிஷன் 16 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. மும்பை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை டிரண்ட் போல்ட் தனது அபார பந்துவீச்சினால் திணறடித்தார்.
இதனையடுத்து, திலக் வர்மா மற்றும் கேப்டன் ஹார்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தியது. இருப்பினும், ஹார்திக் பாண்டியா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் பியூஷ் சாவ்லா (3 ரன்கள்), திலக் வர்மா (32 ரன்கள்), ஜெரால்டு கோட்ஸீ (4 ரன்கள்) மற்றும் டிம் டேவிட் (17 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் மற்றும் டிரண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
நண்ட்ரே பர்கர் 2 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 4 ஓவர்களை வீசிய சஹால் வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்குகிறது.