

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நவி மும்பையில் இன்று(ஜன.10) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் - தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ், மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி, முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளான அமெலியா கெர் 0 ரன்னிலும், கமலினி 16 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். நாட் ஷிவர் பிரண்ட் 46 பந்துகளில் 70 ரன்கள் (13 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 42 பந்துகளில் 74 ரன்கள் (8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தார். நிக்கோலா கேரி 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.
தில்லி கேபிடல்ஸ் தரப்பில் நந்தனி சர்மா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சின்னலே ஹென்றி மற்றும் ஸ்ரீசரணி தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பின்னர், 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேபிடல்ஸ் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், மும்பை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த அணியில் அதிகபட்சமாக சின்னெல்லே ஹென்றி 56 ரன்கள் (5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். மும்பை அணித் தரப்பில் அமெலீயா கெர், நிக்கோலா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தத் தொடரில் இரண்டாவது போட்டியில் விளையாடிய மும்பை அணிக்கு முதல் வெற்றியாகும். முதல் போட்டியில் விளையாடிய தில்லி அணி இந்தத் தொடரை தோல்வியுடன் தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.