பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன்கள் குவிக்கத் தவறுவதால் நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணியில் விராட் கோலியைத் தவிர மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறுகின்றனர்.
இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 203 ரன்கள் எடுத்துள்ளார். அதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். அவருக்கு அடுத்தபடியாக அந்த அணியில் தினேஷ் கார்த்திக் 90 ரன்கள் குவித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி, கிளன் மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் கிரீன் போன்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாகவும், அவருக்கு ஆர்சிபி அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் உதவ வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலிக்கு உறுதுணையாக முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவர் விளையாட வேண்டும். அப்படி விளையாடினால், இந்த சீசனில் ஆர்சிபியால் ஆட்டத்தை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்ற முடியும். தற்போது மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கத் தவறுவதால் விராட் கோலியின் மீது அதிகப்படியான அழுத்தம் ஏற்படுகிறது. விராட் கோலி அவர் மீது அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார் என நினைக்கிறேன். முன்வரிசை மற்றும் நடுவரிசை ஆட்டக்காரர்கள் விராட் கோலிக்கு உதவ வேண்டும் என்றார்.