
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் களமிறங்கினர். டி காக் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, கேப்டன் கே.எல்.ராகுலுடன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடியது. இருப்பினும், கே.எல்.ராகுல் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டொய்னிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஆயுஷ் பதோனி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நிக்கோலஸ் பூரன் 22 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் தர்ஷன் நல்கண்டே தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரஷித் கான் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.