டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது என சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 78 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது எனவும், நடப்பு ஐபிஎல் தொடரில் டி20 போட்டிகள் புதிய பரிணாமம் எடுத்து வருகிறது எனவும் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: டி20 போட்டிகள் எப்போதும் பேட்டிங்குக்கு சாதகமானதாகவே இருக்கும். நடப்பு ஐபிஎல் தொடரில் டி20 போட்டிகள் புதிய பரிணாமத்தில் பயணிக்கின்றன. நாங்கள் அமைத்த வழியில் வெற்றி பெற வேண்டுமென்றால், அதிரடியாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேன்கள் தேவை. அதிரடியான பேட்டிங்கினால் இந்த தொடரை வெல்ல முடியும்.
உண்மையில் எங்களிடம் அதிக அளவில் பந்துவீச்சு தெரிவுகள் இல்லை. இது டெஸ்ட் கிரிக்கெட் இல்லை. பேட்ஸ்மேன்கள் பந்துகளை அடித்து விளையாடுகின்றனர். ஒரு பந்துவீச்சாளராக பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவது அவர்களுக்கு சவாலானதாக இருக்கும். உங்களால் 270 - 280 ரன்கள் அடிக்க முடிந்தால், பந்துவீச்சில் சிறிது தவறினாலும் போட்டியில் வெற்றி பெற முடியும் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.