தாயகம் திரும்பியுள்ள இந்திய அணியின் விராட் கோலி விரைவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே பயிற்சியை தொடங்கி விட்டன. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை. அவர் இதுவரை ஆர்சிபி பயிற்சி முகாமிலும் இணையவில்லை.
இந்த நிலையில், விராட் கோலி இந்தியாவுக்கு வந்துவிட்டதாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு தயாராக உள்ளதாகவும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
அவர் இந்தியாவுக்கு வந்துவிட்டபோதிலும், எப்போது பயிற்சி முகாமில் இணைவார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அவர் விரைவில் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஐபிஎல் சீசனில் விராட் கோலி 639 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.