ஷுப்மன் கில்லின் கேப்டன்சியைப் பார்க்க ஒட்டுமொத்த இந்தியாவும் ஆர்வமாக இருப்பதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பினார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, குஜராத் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஷுப்மன் கில்லின் கேப்டன்சியைப் பார்க்க ஒட்டுமொத்த இந்தியாவும் ஆர்வமாக இருப்பதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷுப்மன் கில் கேப்டன் பதவியில் எவ்வாறு செயல்படுவார் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன். நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் ஆர்வமாக உள்ளது. அவர் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பக்கூடிய வீரர். அவர் கேப்டனாக செயல்படும்போது அவரது வளர்ச்சிக்கு உதவியாக இருக்கத் தயாராக உள்ளோம். அவர் கண்டிப்பாக சிறந்த கேப்டனாக உருவாகுவார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்துவதற்கு முன்பு ஹார்திக் பாண்டியா ஒரு அணியை கேப்டனாக வழிநடத்தியது கிடையாது. தற்போது 10 அணிகள் உள்ளன. இது முதல் உதாரணம் அல்ல. ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா போன்ற வீரர்களும் கொல்கத்தா அணியை வழிநடத்துவதற்கு முன்பு வேறெங்கும் அணியை வழிநடத்தியது கிடையாது என்றார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.