கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பெங்களூரு முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். டு பிளெஸ்ஸி 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், கேமரூன் கிரீன் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்களை உயர்த்தியது. இருப்பினும்,கேமரூன் கிரீன் 33 ரன்களில் ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் (28 ரன்கள்), ரஜத் படிதார் (3 ரன்கள்) மற்றும் அனூஜ் ராவத் (3 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 59 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் ஹர்சித் ராணா மற்றும் ஆண்ட்ரே ரஸல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சுனில் நரைன் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது.